Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் திமுக அரசுக்கிடையே மோதல் முற்றிவரும் நிலையில், முதலமைச்சருக்கு மூன்று கேள்விகள் கேட்டு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் திமுக எம்.பி-க்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆதாரத்துடன் கேள்வி கேட்டு முதலமைச்சர் பதிவிட்டார். இந்நிலையில், முதலமைச்சருக்கு மூன்று கேள்விகள் கேட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தர்மேந்திர பிரதான், திமுக எம்.பி-க்கள் மோதல்
இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. அப்போது, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து பேசிய திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்காது. அதனால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தராமல் இருப்பது கண்டனத்திற்குரியது என பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராகவே உள்ளது. பி.எம்ஸ்ரீ திட்டத்தில் திமுக அரசு U TURN அடித்துள்ளது. பிஎம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கும் தமிழ்நாட்டின் சூப்பர் முதலமைச்சர் யார்? பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திமுக அரசு கையெழுத்திட தயாராக இருந்தது. சூப்பர் முதல்வரின் பேச்சை கேட்டு கடைசி நேரத்தில் கையெழுத்திட மறுத்தனர் என கூறினார்.
பிம்.ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்றது கனிமொழிக்கும் தெரியும். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பது குறித்து திமுக எம்.பி கனிமொழி விளக்கம் சொல்ல வேண்டும்” எனவும் கேட்டார். மேலும், திமுக எம்.பி-க்கள் நேர்மையற்றவர்கள், தமிழ்நாடு மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை, அவர்கள் ஜனநாயகமற்ற மற்றும் அநாகரீகமானவர்கள் என பேசியுள்ளார். இதையடுத்து தமிழ்நாட்டுக்கு நீதி வேண்டும் என கேட்டு, தர்மேந்திர பிரதானை முற்றுகையிட்டு திமுக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு
இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதில், “தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதனை ஏற்கிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! என்று கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்” என தனது பதிவில் கேட்டுள்ளார்.
முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மூன்று கேள்விகள் கேட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய அமைச்சர் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? அவர் உண்மையை தானே சொல்லியிருக்கிறார் என்று கேட்டுள்ளார்.
இரண்டாவதாக, மக்களின் எண்ணங்களுக்கு மட்டும் மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே? யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா? எனவும், மூன்றாவதாக, யார் அந்த சூப்பர் முதல்வர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.
— K.Annamalai (@annamalai_k) March 10, 2025
முதல் கேள்வி:
திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு @dpradhanbjp அவர்கள் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கேள்வி:
மக்களின் எண்ணங்களுக்கு… https://t.co/hN32oorgqi


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

