![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Maharashtra Ajit Pawar: மகாராஷ்டிராவில் மீண்டும் வேலையை காட்டிய அஜித் பவார்.. 5 ஆண்டுகளில் 3வது முறையாக துணை முதலமைச்சர் பதவி - வரலாறு என்ன?
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்து மீண்டும் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
![Maharashtra Ajit Pawar: மகாராஷ்டிராவில் மீண்டும் வேலையை காட்டிய அஜித் பவார்.. 5 ஆண்டுகளில் 3வது முறையாக துணை முதலமைச்சர் பதவி - வரலாறு என்ன? Ajit Pawar takes oath as deputy CM, 3rd time since 2019. What happens to NCP headed by sharad pawar Maharashtra Ajit Pawar: மகாராஷ்டிராவில் மீண்டும் வேலையை காட்டிய அஜித் பவார்.. 5 ஆண்டுகளில் 3வது முறையாக துணை முதலமைச்சர் பதவி - வரலாறு என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/02/4b5893c90a249d6b00656ec92d4f040a1688289368028488_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்து மீண்டும் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
எதிர்பாராதா கூட்டணி:
மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த பாஜக உள்ளிட்ட எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் நிலவியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான அஜித் பவார், கட்சி தலைமைக்கு எதிராக, தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் சென்று பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தார்.
ஐந்தே நாட்கள் நீடித்த ஆட்சி:
பரபரப்பான அரசியல் சூழலில் அமைந்த இந்த கூட்டணிக்கு, 2019ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி அதிகாலையில் ஆளுநர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். அதன்படி, பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 5 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது. ஆனால், அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற இரண்டே நாட்களில், அவருக்கு எதிராக பாஜக ஆட்சியில் பதியப்பட்ட 9 வழக்குகள் ஊழல் தடுப்பு போலீசாரால் கைவிடபட்டது.
மகா விகாஸ் கூட்டணி:
தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த நிலையில், சிவசேனா - காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மகாவிகாஸ் எனும் கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி ஆட்சி அமைத்தபோது மீண்டும் தேசியவாத காங்கிரசில் இணைந்தார் அஜித் பவார். அந்த கூட்டணியிலும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
கவிழ்ந்த ஆட்சி:
இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மகா விகாஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பிரிந்து சென்று பாஜக உடன் கூட்டணி அமைத்தார். மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து அவர் முதலமைச்சர் ஆன நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
தேசியவாத காங்கிரசில் வெடித்த பிரச்னை:
இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே தேசியவாத காங்கிரஸில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் அஜித் பவார் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. அதனை மேலும் அதிகப்படுத்தும் விதமாக, தேசியவாத காங்கிரசின் செயல் தலைவராக சுப்ரியா சுலேவை, சரத் பவார் அண்மையில் நியமித்தார். இதனால், அஜித் பவார் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் செய்த துரோகம்:
இந்த நிலையில் தான், அஜித் பவார் மீண்டும் தனது ஆதரவு எம். எல்.ஏக்கள் உடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் தேசியவாத காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)