MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
நெல் ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அரசு மறுத்துள்ளது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடியுள்ளார்.

நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்துவது தொடர்பாக கடிதம் எழுதியும், மத்திய அரசு அதை நிராகரித்துள்ளதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடியுள்ளார். முதலமைச்சரின் பதிவை தற்போது பார்க்கலாம்.
“பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி“
மத்திய அரசை கண்டித்து உழவர்கள் நடத்திவரும் போராட்டம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?“ என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின.
உடனே, "சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?" என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்.
நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா?
மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த திரு. பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா?
உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது!“ என்று முதலமைச்சர் தனது பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.






















