நடிகை கடத்தல் வழக்கு: 6 பேருக்கு 20 ஆண்டு சிறை! திலீப் விடுவிப்பு! கேரளாவில் பரபரப்பு தீர்ப்பு!
இந்த வழக்கில் பரவலாக பேசப்பட்ட மற்றொரு அம்சம் என்னவெனில், மலையாளத் துறையின் பிரபலமான நடிகர் திலீப் இந்த சதிக்கு பின்னணியில் இருந்தார் என குற்றச்சாட்டு.
கேரளாவில் 2017 ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்கில், எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய பிரதான ஆறு பேர் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
பல்சர் சுனி, மார்ட்டின் ஆண்டனி, மாணிக்கந்தன், விஜேஷ், சலீம் மற்றும் பிரதீப் ஆகியோர் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தண்டிக்கப்பட்டனர். இந்த வழக்கின் சாராம்சம் என்னவெனில், 2017-ல் நடிகை ஒருவரை எதிர்பாராத விதமாக காரில் கடத்தி, அவரை மிரட்டி, பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டு, அந்த சம்பவத்தைக் கோரமாக வீடியோவாகப் பதிவு செய்தனர். பின்னர் இது பெரிய குற்றமாக பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கூட்டு பாலியல் வன்கொடுமை, சட்டவிரோதமாக அடைத்தல், களங்கம் விளைவித்தல், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல், ஆதாரங்களை அழித்தல், மற்றும் ஆபாச வீடியோக்களை எடுத்து பரப்ப முயன்றல் போன்ற பல குற்றப்பிரிவுகள் அடங்கும்.
இந்த வழக்கில் பரவலாக பேசப்பட்ட மற்றொரு அம்சம் என்னவெனில், மலையாளத் துறையின் பிரபலமான நடிகர் திலீப் இந்த சதிக்கு பின்னணியில் இருந்தார் என்ற குற்றச்சாட்டு. விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி, பல்சர் சுனியை பயன்படுத்தி, நடிகையை கடத்தி அவமானப்படுத்தியதும், அதை வீடியோவாக பதிவு செய்ததும் திலீப்பின் உத்தரவின் பேரில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது சாதாரண குற்றம் அல்ல, சுபாரி கொலை மாதிரியான முறையில் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை எனவும் வாதிடப்பட்டது. ஆனால், திலீப் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் கருதியதால், அவரும், அவருடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சார்லி தாமஸ், சனில் குமார், மற்றும் சரத் நாயர் ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
சார்லி தாமஸ் குற்றவாளிகளுக்கு தங்குமிடம் கொடுத்ததாகவும், சனில் சிறையில் பல்சர் சுனியுடன் சேர்ந்து திலீப்பை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டதாகவும், சரத் அந்த வீடியோக்களை அழிக்க உதவியதாகவும் முன்பு குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. ஆனால் இவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் போனதால், அவர்களுக்கு விடுதலை கிடைத்தது.இதே நேரத்தில், இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக இருந்த விஷ்ணு, விபின்லால், மற்றும் அனீஷ் ஆகியோரும் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டனர்.
இது விசாரணைக்குப் பெரிய ஆதாரங்களாக இருந்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என்று கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. சட்ட அமைச்சர் பி. ராஜீவ், பாதிக்கப்பட்ட நடிகைக்கு முழுமையான நீதி கிடைக்கவில்லை. இது நாம் எதிர்பார்த்த முடிவு அல்ல. மாநில அரசு தொடக்கம் முதல் இந்த நடிகைக்கு துணையாக இருந்துள்ளது. அதே நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




















