![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் முதல்முறையாக பொம்மிடியில் ராட்சத பலூனில் குளிர்சாதன வசதியுடன் நவீன முறையில் மாடர்ன் திரையரங்கு.
![அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா? Balloon Theater in Dharmapuri Bomidi For First Time in Tamil Nadu Modern Theater With AC TNN அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/1904b6350b7702d138d5b348e764b1811719909654618113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பழங்காலம் முதல் இன்று வரை மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருப்பது திரையரங்கம், சினிமா பார்ப்பதுதான். கடந்த காலங்களில் வெறுமனே சிமெண்ட் சீட்டு போட்டு, மணல் பரப்பி சினிமா திரையிடப்படும். அப்பொழுது சினிமா பார்க்க வருகின்றவர்கள் தரையில் அமர்ந்து பார்த்து வந்தனர். தற்போது சினிமா தியேட்டர் என்பது, நவீன வசதி உடன் அமரும் வகையிலும், சாய்ந்து படுப்பது போன்ற இருக்கைகள் அமைத்து, குளிர்சாதன வசதியுடன் திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் காலங்கள் மாற மாற நவீன வசதிகள், வரும் சூழலில் சினிமா பார்ப்பதற்கான கட்டணங்களும் அதிகரித்து வந்தது. ஆனாலும் சினிமா பார்ப்பவர்களின் நிலை குறையாமல் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக சினிமா திரையரங்கம் என்பது, ஒன்று என்பது மாறி, நான்கு, ஐந்து ஒரே நேரத்தில் வெவ்வேறு படங்கள், வெவ்வேறு இடங்களில் திரையிடப்படுவது போன்ற நவீன வசதிகளை கொண்டு வந்தது. ஆனால் இந்த நவீன வசதிகள் முழுவதும் பெருநகரங்களில் மட்டுமே இருந்து வருகிறது. இதனால் கிராமப்புற பகுதிகளில் இருப்பவர்கள், சினிமா திரையரங்குகளுக்கு செல்ல வேண்டும் என்றால், அந்தப் பகுதியில் உள்ள சாதாரண திரையரங்குக்கு மட்டுமே சென்று, திரைப்படம் பார்த்து வந்தனர். அந்த திரையரங்கிற்கு செல்ல வேண்டும் என்றால், அவர்களுக்கு செலவினங்கள், கால நேரம் போன்றவை அதிகமாக தேவைப்படுகிறது.
பலூனுக்குள் சினிமா திரையரங்கம்
தருமபுரி மாவட்டம் பொம்மிடியை சார்ந்த அக்குபஞ்சர் டாக்டர் ரமேஷ் என்பவர், ஆரம்ப காலங்களில் இருந்து சினிமா மீது இருந்த மோகத்தால், சினிமாத் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வெளி ஊர்களுக்கு செல்லுகின்ற பொழுது, நவீன வசதி கொண்ட புதியதாக வித்தியாசமான முறையில், மாடர்ன் தியேட்டர்களை உருவாக்க வேண்டும் என்று மும்பை சென்றபோது ராட்சத பலூனுக்குள் சினிமா திரையரங்கம் இருப்பதை பார்த்து, இதுபோன்று நமது ஊரிலும் அமைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். தற்போது பொம்மிடி பேருந்து நிலையம் அருகில் 50 சென்ட் நிலத்தில், 20 ஆயிரம் சதுர அடியில் ராட்சத பலூன் மூலம் நவீன வசதி கொண்ட குளிர்சாதன திரையரங்கை அமைத்துள்ளார். இது முழுவதும் கட்டிடங்கள் இல்லாமல், முழுவதும் பலூனால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள்ளாக பலூன் என்பது தெரியாத அளவிற்கு சாய்ந்து படுத்து பார்க்கின்ற அளவிற்கு அழகான இருக்கைகள், குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திரையரங்கில் படம் பார்க்கின்ற பொழுது அதனுடைய சவுண்ட் உள்ளிட்ட வசதிகள், பெரிய பெரிய திரையரங்குகளில் இருப்பது போன்றவை டிஜிட்டல் சவுண்ட் அமைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவு வசதி கொண்ட இந்த திரையரங்கில் கட்டணம் என்பது கிராமப் புறங்களில் இருக்கின்ற திரையரங்குகளில், வசூல் செய்யப்படுகின்ற, சாதாரண அளவில் கட்டணமே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் 140 பேர் அமரக்கூடிய வகையில் அமை க்கப்பட்டு, திருமண விழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம். இதற்காக திரை அருகில் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது தங்களது விருப்பத்திற்கு ஏற்ற திரைப்படங்களை பார்த்து மகிழலாம்.
நவீன வசதிகளுடன் திரையரங்கம்
மேலும் பலூனால் அமைக்கப்பட்டு திரையரங்கு என்பதால், பஞ்சர் ஆகிவிடும், காற்று வீசினால் பாதிப்புகள் ஏற்படும், இது போன்ற எந்த வித பாதிப்புகளும் இல்லாமல், பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த திரையரங்கில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றால், 3 மணி நேரத்தில் இந்த பலூனை கழட்டி, வேற இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். ஒரே வாரத்தில் திரையரங்கை தரை தயார் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திரையரங்கில் கன்டெய்னர்கள் மூலமாக டிக்கெட் கவுண்டர், கேண்டின்கள், ப்ராஜெக்ட் ரூம் போன்றவற்றை நவீன வசதிகளுடன் ஏற்படுத்தியுள்ளனர்.
திரையரங்குக்கு வரும் குழந்தைகளை கவரும் வகையில், பல்வேறு வகையான உணவு வகைகளும் தயார் செய்யப்படுகிறது. இங்கு வாங்கி உண்பவர்கள் அமர்ந்து ஓய்வெடுத்து உண்பதற்காக, செயற்கை புல்வெளியில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புல்வெளியில் அமர்ந்து உண்ணலாம். இந்த புல்வெளியில் நடமாடினாலோ, அமர்ந்தாலோ காய்ந்து விடும் என்பதற்கில்லை. இது செயற்கை முறையில் டைல்ஸ் போன்று ஓட்டுவது. இதற்கு ஆண்டுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்தால் மட்டுமே போதும் இது எப்பொழுதும் பசுமையாகவே இருக்கும்.
அதே போல் இந்த பூங்காவில் அக்குபஞ்சர் சிகிச்சைக்காக கூழாங்கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது நடக்கும் பொழுது கால்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சைகளை பெற முடியும். சாதாரணமாக ஒரு குளிர்சாதன வசதியுடன் கூடிய திரையரங்க அமைத்தால் ரூ.4 கோடி வரை செலவாகும்.
ஆனால் இந்த திரையரங்கத்தில் அதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே செலவாகிறது. இந்த பலூன் திரையரங்கை அறிந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதேபோல் அமைப்பது குறித்து நேரில் வந்து பார்த்து கேட்டு அறிந்து செல்கின்றனர். இது முதன் முறையாக இந்த இடத்தில் அமைக்கப்பட்டு அதன் பிறகு போச்சம்பள்ளி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைப்பதற்கான திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பலூனில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)