”நீதிமன்ற குரல் இப்போது சட்டமன்றத்தில் ஒலிக்கும்” - தவெக வேட்பாளர் உறுதி...
சிங்காநல்லூர் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் ஸ்ரீ கிரி பிரசாத், பிரம்மாண்ட ஊர்வலத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து, திமுகவுக்கு எதிராக கடும் சவால் விடுத்தார்.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர், வழக்கறிஞர் கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவர் ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலமாக கலந்து கொண்டார்.
சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க, கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இளைஞர் எழுச்சியால் விஜய் முதல்வர் உறுதி
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ கிரி பிரசாத், தாம் இதுவரை வழக்கறிஞராக இருந்து மக்களுக்கு சேவை செய்து வந்ததாகவும், தற்போது அரசியல் களத்தில் இறங்கி மேலும் விரிவாக மக்கள் பணி செய்யும் வாய்ப்பு தவெகவின் மூலம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். சிங்காநல்லூர் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், குடிநீர், சாலை, கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாக கூறினார். இந்த பிரச்சினைகளை முன்னிறுத்தியே தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தத் தேர்தலில் தவெக மற்றும் திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது எனக் கூறிய அவர், இளைஞர்களின் ஆதரவு அதிகரித்து வருவதாகவும், அந்த எழுச்சியின் பலனாக தவெக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வேட்புமனு தாக்கல் நிகழ்வு சிங்காநல்லூர் தொகுதியில் தேர்தல் பரபரப்பை அதிகரித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















