பதவி உயர்வு கேட்டு போராடும் உதவி பேராசிரியர்கள்... திடீர் உள்ளிருப்பு போராட்டத்தால் பதற்றம்...
பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, அண்ணா பல்கலையில் உதவி பேராசிரியர்கள் மூன்றாவது முறையாக ‘திடீர்’ உள்ளிருப்பு போராட்டம் : 18 ஆண்டு உழைப்பிற்கு இது தான் பரிசா என வேதனை

பதவி உயர்வு, பணபலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து பேராசிரியர்கள் மூன்றாவது முறையாக திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 18 ஆண்டுகளாக எந்தவொரு எந்த ஒரு ஆதாயமின்றி, மாணவர்களின் எதிர்காலத்திற்காக உழைத்து வரும் தங்களுக்கு, உரிய பதவி உயர்வு மற்றும் இதர பணப் பலன்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளிருப்பு போராட்டத்தை கையில் எடுத்த அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள்
ஏற்கனவே இரண்டு முறை போராட்டங்கள் நடத்தியும், சென்னை அண்ணா பல்கலைக்கழக தலைமை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய நிலையில், மூன்றாவது முறையாக இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய அண்ணா பல்கலைக் கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் சுரேஷ், பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்குப் பின்னால் பேராசிரியர்களின் 18 ஆண்டு கால அர்ப்பணிப்பு இருப்பதை நிர்வாகம் மறந்து விட்டதாக சாடினார். "தங்களது நியாயமான பதவி உயர்வு கோரிக்கைகளைச் சென்னை நிர்வாகத்திடம் பலமுறை கொண்டு சென்றும், இதுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கு மாணவர்களின் கல்வியையும் பாதிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவினாலும், தங்களது உரிமைகளுக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபடுவதாக உதவி பேராசிரியர்கள் தெரிவித்தனர். 3வது முறையாக பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து உதவி பேராசிரியர்களின் போராட்டம் காரணமாக பதற்றமான சூழல் நிலவியது.























