![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
வனத்துறை வியூகங்களை தவிடுபொடியாக்கிய ’பாகுபலி’ யானை .. கைவிடப்பட்ட ’ஆபரேஷன் பாகுபலி’
நீண்ட தந்தங்களுடன் ஆஜானுபாகுவான உருவத்துடன் இந்த காட்டு யானை இருப்பதால், பாகுபலி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
![வனத்துறை வியூகங்களை தவிடுபொடியாக்கிய ’பாகுபலி’ யானை .. கைவிடப்பட்ட ’ஆபரேஷன் பாகுபலி’ The forest department has temporarily abandoned 'Operation Bahubali elephant in coimbatore வனத்துறை வியூகங்களை தவிடுபொடியாக்கிய ’பாகுபலி’ யானை .. கைவிடப்பட்ட ’ஆபரேஷன் பாகுபலி’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/28/b59df21e1f4401598899c5c0fddf9f6c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒரு ஆண் காட்டு யானை உலா வருகிறது. நீண்ட தந்தங்களுடன் ஆஜானுபாகுவான உருவத்துடன் இந்த காட்டு யானை இருப்பதால், பாகுபலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த யானை மற்ற யானை கூட்டத்தோடு சேராமலும் அடர்ந்த வனத்தினுள் செல்லாமலும் மாதக்கணக்கில் குடியிருப்பு பகுதிகளில் தனியே சுற்றித் திரிகிறது. யானைகள் ஒன்றிரண்டு வாரங்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்காமல் இடம் விட்டு இடம் மாறிவிடும் வழக்கம் கொண்டது. ஆனால் இந்த யானை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பகுதியில் இருந்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த வருகிறது. இந்த யானை தற்போது வரை மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை என்றாலும், தொடர்ந்து உணவுக்காக விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பாகுபலி யானையை பிடித்து, ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்ட ரேடியோ காலர் பொறுத்தி அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஸ் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த கும்கி யானைகளின் உதவியுடன் மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் கடந்த ஜீன் மாதம் 27 ம் தேதி துவக்கினர். வனத்துறை அதிகாரிகள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். மேலும் 5 மருத்துவர்கள் தலைமையில் 5 குழுக்களாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயன்ற போது, அது யானையின் மீது படாமல் சென்றது. பின்னர் அதனைப் பிடிக்க வனத்துறையினர் வகுத்த வியூகங்களை பாகுபலி யானை தவிடுபொடியாக்கியது.
பின்னர் அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால் ’ஆபரேசன் பாகுபலி’யை வனத்துறையினர் தற்காலிகமாக கைவிட்டனர். தொடர்ந்து அந்த யானையை கண்காணித்து, ரேடியோ காலர் பொருத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதாலும், அப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும் ரேடியோ காலர் பொருத்தும் பணிகளை தற்காலிகமாக கைவிட்டனர். 3 கும்கி யானைகளும் மீண்டும் டாப்சிலிப் முகாமிற்கு திருப்பி அனுப்படுகின்றன. பாகுபலி யானையை தொடர்ச்சியாக கண்காணித்து உரிய நேரம் கிடைக்கும் போது மீண்டும் ரேடியோ காலர் பொருத்தும் பணிகள் துவக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)