இனி மின்கம்பி தொட்டு யானைகள் பலி இல்லை.? - கோவையில் புதிய டெக்னாலஜி...
கோவையில் காட்டு யானைகள் பலியாவதை தடுக்க மின்வாரியத்தின் அதிரடி நடவடிக்கை

கோவை: காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க, வனப்பகுதிகளில் செல்லும் மின்கம்பிகளுக்கு சிலிக்கான் உரைகள் பொருத்தும் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மாதம்பட்டி அருகே கடந்த 8-ம் தேதி மின்கம்பியை தொட்ட காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வன எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் நிலவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுமார் 500 கிலோ மீட்டர் நீள மின்கம்பிகளுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக, வனப்பகுதிகளில் செல்லும் மின்கம்பிகளில் சிலிக்கான் உரைகள் பொருத்தப்பட உள்ளன. இந்த உரைகள் ஒன்றோடு ஒன்று இணையும் வகையில் அமைக்கப்படுவதால், விலங்குகள் மின்கம்பிகளை தொட்டாலும் மின்சாரம் தாக்கும் அபாயம் குறையும் என கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு யானை வழித்தடத்தில் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோதனை முறையில் இந்த பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், யானைகள் செல்லும் பாதைகளில் மின்சுற்று துண்டிப்பான்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. யானைகள் மின்கம்பியை தொடும் தருணத்தில் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் இந்த கருவிகள் செயல்படும்.
கோவை, உடுமலைப்பேட்டை மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் வனவிலங்குகள் பாதுகாப்புக்கான கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















