மலை ரயில் டிக்கெட் சர்ச்சை – ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருந்த ஊழியர்
மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு – தேர்தல் பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுக்கு மாற்றுத்திறனாளி ஊழியர் இரவு முழுவதும் காத்திருந்ததாக குற்றச்சாட்டு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு மலை ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் பெறுவதற்காக, மாற்றுத்திறனாளி கிராம நிர்வாக உதவியாளரை இரவு முழுவதும் ரயில் நிலையத்தில் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தல் பணிகளின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் தங்கியிருந்த தேர்தல் பார்வையாளர்கள் உதகை செல்ல திட்டமிட்டிருந்தனர். அவர்கள் நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய விரும்பியிருந்த நிலையில், முன்பதிவு செய்யாததால் டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உயர் அதிகாரிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் மேட்டுப்பாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து இரண்டு கிராம நிர்வாக உதவியாளர்களை ரயில் நிலையத்திற்கு அனுப்பி டிக்கெட் பெற அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலை ரயிலுக்கான டிக்கெட்டுகள் மிகவும் குறைவாக வழங்கப்படுவதால், பயணிகள் முன்பே வந்து நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் பெறுவது வழக்கம். இந்த நிலையில், டிக்கெட் வாங்க அனுப்பப்பட்ட இருவரில் ஒருவர் மாற்றுத்திறனாளி என்பதையும் பொருட்படுத்தாமல், நேற்று இரவு சுமார் 11 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கொசு தொல்லையை தவிர்க்க கொசு மருந்து, போர்வை உள்ளிட்ட பொருட்களுடன் அவர்கள் ரயில் நிலையத்தில் தங்கி இருந்து, காலை வரை காத்திருந்து அதிகாரிகளுக்கான டிக்கெட்டுகளை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















