கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு ; மேலும் ஒருவரை கைது செய்த என்.ஐ.ஏ
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமேசா முபின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் கோவை உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ், இலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் கேரள சிறையில் இருந்த அசாரூதின் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இறுதியாக கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேர் மீது நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவை போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த தாஹா நசீர் (27) என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் கார் சர்வீஸ் நிறுவனத்தில் பெயின்டராக வேலை செய்து வந்துள்ளார். கார் குண்டு வெடிப்பு குறித்து நசீருக்கு முன்கூட்டியே தெரியும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நசீரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனால் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.





















