![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'கோவை மாநகராட்சி மேயர் யார்'? - அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்ன தகவல் இதுதான்!!
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற்றது.
!['கோவை மாநகராட்சி மேயர் யார்'? - அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்ன தகவல் இதுதான்!! Minister Senthil balaji said that the Chief Minister will decide who will be the Mayor of Coimbatore 'கோவை மாநகராட்சி மேயர் யார்'? - அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்ன தகவல் இதுதான்!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/dfd4048c69299eb3e334b6fcb8bfd0d5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், எம்.பி சண்முகசுந்தரம், முன்னாள் எம்பி.நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கவுன்சிலர்கள் பணியாற்றுவது குறித்து ஆலோசணை வழங்கப்பட்டது. மேலும் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 96 சதவீத அளவிற்கு திமுகவிற்கு மகத்தான வெற்றியை வாக்காள பெருமக்கள் வழங்கி உள்ளனர். இது முதலமைச்சர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. அதிமுக ஆட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. குடிநீர், சாக்கடை, சாலை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது. இதில், எவ்வாறு மக்கள் பணியாற்ற வேண்டும் என கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கான பணிகள் திட்டமிடுதல் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பட்டியல் தயாரிக்கப்பட்டு முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று சிறப்பு நிதிகள் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நன்றி என்பதை வார்த்தையாக இல்லாமல் திட்டங்கள் மூலம் மக்களுக்கு நன்றியை செலுத்த உள்ளோம்.
அதிமுக ஆட்சியில் திட்டங்களுக்கு வர உள்ள நிதிகள் வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதற்காக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் செய்த தவறுகள் சரி செய்யப்பட்டு, உள்ளாட்சியில் தூய்மையான நிர்வாகத்தை வழங்க உள்ளோம். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது. இது ரகசிய தேர்தல் கிடையாது. இதில் இயற்கை, செயற்கை எங்கே இருக்கிறது? இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. முதல்வர் மீது மக்கள் வைத்த நம்பிக்கை தான் மகத்தான வெற்றியை தந்தது. 234 கோடி வளர்ச்சி திட்டங்களுக்காக தனது தொகுதியாக நினைத்து முதல்வர் கோவைக்கு வழங்கியுள்ளார். தமிழக முதல்வரின் பிறந்த நாளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி மேயராக வர விருப்பம் உள்ளவர்களிடம் கடிதம் பெறப்பட்டு முதல்வரிடம் வழங்க உள்ளோம். மேயர் யார் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார்.
கோவையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தை பொறுத்த வரை கடந்த ஆட்சியில் புதிய மின் உற்பத்தி முயற்சிகள் எடுக்கப்படவில்லை. முதல்வரின் ஆலோசனையின் பேரில் மாவட்டந்தோறும் மின் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் மின் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)