![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Coimbatore | கோவையில் அதிகரிக்கும் கொரோனா.. மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
கோவையில் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
![Coimbatore | கோவையில் அதிகரிக்கும் கொரோனா.. மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு! Increased lockdown restrictions due to increasing corona infection in Coimbatore Coimbatore | கோவையில் அதிகரிக்கும் கொரோனா.. மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/21/0dba9150ac016ad1b8212045c3b7ec31_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக, கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி தொற்று பாதிப்பில் சென்னை முதலிடம் பிடித்தாலும், கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
கோவை மாவட்டத்தில் உள்ள பால், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள் மற்றும் சந்தைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பன்னடுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வார சந்தைகளுக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
அனைத்து உணவகங்கள், அடுமனைகள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தைகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் சந்தைகளில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்தவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை சார் ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் உறுதிப்படுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 82 சதவீதத்திற்கு மேல் பொது மக்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற 20 ம் தேதி முதல் அனைத்து வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் பணி புரியும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற 17 ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)