IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
ஐஐடி சென்னை, இந்திய ஸ்டேட் வங்கி அறக்கட்டளை ஆகியவை இணைந்து பாரா விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை வழங்கி வருகின்றன.

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9, 2026 கடைசி நாளாகும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பாரா விளையாட்டு வீரருக்கும் ஓராண்டுக்கு ரூ.40,000 வீதம் உதவித்தொகை அளிக்கப்படும். அத்துடன் விளையாட்டு அறிவியல் அடிப்படையிலான திறன் மதிப்பீடு, ஊட்டச்சத்து வழிகாட்டல், பிரத்யேக திறன் மேம்பாட்டு ஆதரவு ஆகியவையும் வழங்கப்படும்.
80 பேர் பயன்பெறுவர்
சென்னையில் உள்ள ஐஐடி சென்னை, இந்திய ஸ்டேட் வங்கி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இரண்டாம் கட்டமாக ‘பாரா விளையாட்டு வீர்ர்களுக்கான விளையாட்டு உதவித்தொகை திட்டத்தை தொடங்கியுள்ளன. 8 பாராலிம்பிக் பிரிவுகளைச் சேர்ந்த 80 வீரர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வீதம் ஓராண்டுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதுடன், அவர்களின் போட்டித் திறனை மேம்படுத்தும் விதமாக விளையாட்டு அறிவியல் அடிப்படையிலான திறன் மதிப்பீடு, ஊட்டச்சத்து வழிகாட்டல், பிரத்யேக திறன் மேம்பாட்டு ஆதரவு ஆகியவையும் வழங்கப்படும்.
இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 9, 2026 வரை பின்வரும் இணையதள முகவரி மூலம் ஏற்றுக் கொள்ளப்படும்: https://sbif-ace-pass.sbifoundation.info/.
என்னென்ன விளையாட்டுகள்?
வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், ஜூடோ, பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேக்வாண்டோ ஆகிய பிரிவுகளில் 40 ஆண்கள், 40 பெண்கள் என 80 பாரா விளையாட்டு வீரர்களுக்கு இந்த உதவித்தொகை ஆதரவளிக்கும்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது சர்வதேசப் போட்டிகளில் தங்கள் மாநிலத்தையோ அல்லது இந்தியாவையோ பிரதிநிதித்துவப்படுத்தும் 35 வயதுக்குட்பட்ட இந்திய பாரா-விளையாட்டு வீரர்கள், இத்திட்டத்தின் தேர்வு நிபந்தனைகள், தேவையான சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதற்கு உட்பட்டு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
2025-ஆம் ஆண்டு 26 பாரா-விளையாட்டு வீரர்களுடன் தொடங்கப்பட்ட முதற்கட்டத் திட்டத்தின் சிறப்பான வெற்றியைத் தொடர்ந்து இந்த விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதலாண்டிலேயே விளையாட்டு வீரர்கள் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் 32 தங்கம், 22 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்கள் என 70 பதக்கங்களை வென்றனர்.
இந்த இரண்டாம் கட்டத்தில், தொடர்ச்சியான நிதியுதவியுடன் அறிவியல் பூர்வமான திறன் மேம்பாட்டு ஆதரவுடன் இந்தியாவின் பாரா விளையாட்டுகளின் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும். திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளித்து, அவர்களின் போட்டித் திறனை அதிகரித்து, பாராலிம்பிக் போட்டிகள் உட்பட முக்கிய தேசிய, சர்வதேச நிகழ்வுகளுக்கு தயார்படுத்தும் என்று ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























