சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள்... கோவை–கேரள எல்லைகளில் தீவிர சோதனை...
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு. இரு மாநில அதிகாரிகள் இணைந்து ஆலோசனை.

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை–கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலானார். இதில், தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள பாலக்காடு, எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் தொடர்பான முக்கிய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் காலத்தில் எல்லை வழியாக நடைபெறக்கூடிய சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுப்பது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, கோவை – கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, 24 மணி நேர கண்காணிப்பை தீவிரப்படுத்துவது மற்றும் வாகன சோதனைகளை கடுமையாக்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
கோவையில் ஆலோசனைக் கூட்டம்
மேலும், தேர்தல் நேரத்தில் மதுபானம், பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் கள்ள நோட்டுகள் கடத்தப்படுவதைத் தடுக்க இரு மாநில அதிகாரிகளும் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்களை கண்காணிப்பதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதும், தகவல் பரிமாற்றத்தை விரைவுபடுத்துவதும் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொதுப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் எல்லைப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்புப் பணிகளை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை, வருவாய் துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம், சட்டமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.























