Group 2 Exam Cancelled: குரூப் 2, 2A தேர்வு திடீரென ரத்து... குழப்பத்தில் ஆழ்ந்த தேர்வர்கள்...
குரூப் 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் பாதியிலேயே வெளியேறிய தேர்வர்களால் பரபரப்பு.

தமிழகம் முழுவதும் குரூப்2, 2A தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வர்கள் எழுத தயாராகி இருந்த நேரத்தில் ரத்து என்ற அறிவிப்பால் தேர்வர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளியில் காலை தேர்வு எழுத கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300க்கும் மேற்பட்டோர் தேர்வெழுத வந்தனர். அப்போது, சென்னையில் சில தேர்வு மையங்களில் நடைபெற்ற கோளாறுகள் காரணமாக தேர்வர்கள் குழப்பமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் , தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்து பின்னர் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு சுற்றறிக்கை கோவை மையத்திற்கு தாமதமாக கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால், சுமார் 20 நிமிடங்கள் வரை தேர்வு தொடர்ந்தது. பின்னர் சுற்றறிக்கை வந்தவுடன் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்வர்கள் பாதியிலே தேர்வை நிறுத்திவிட்டு வெளியேறினர். மேலும் சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் கோவையில் இந்த மையத்தில் முன்கூட்டியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதுகுறித்து தேர்வர்கள் கூறுகையில் குரூப் 2, 2A தேர்விற்காக பல மாதங்கள் படித்து தயாராகி தேர்வை எழுதி வந்த நிலையில் திடீரென தேர்வு ரத்து என்று கூறியது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்தனர். இனி அடுத்த தேர்வு நாள் எப்பொழுது என்று எதிர்நோக்கி மீண்டும் அதற்கு தயாராக வேண்டும் என்றும் வேதனை தெரிவித்தனர். இந்த தேர்வு சுலபமாக தான் இருந்ததாக குறிப்பிட்ட தேர்வர்கள் அடுத்து வரக்கூடிய தேர்வு எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை என்றனர்.
இதுகுறித்து பேட்டியளித்த பார்வை மாற்றுத்திறனாளி பிரித்விராஜ் என்பவர், தேர்வு ரத்து செய்யப்பட்டது மிகுந்த கவலை அளிப்பதாகவும் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த மையத்திற்கு வந்திருப்பதாக தெரிவித்தார். பல நாட்கள் படித்து தயாரான நிலையில் தற்போது இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மீண்டும் தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலை இருப்பதாகவும், கால விரயம் தான் ஏற்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.























