![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
கோவை: கனமழை காரணமாக காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட 193 பள்ளிகளுக்கு விடுமுறை!
காரமடை ஒன்றியம் மற்றும் மேட்டுப்பாளையம் உட்பட மொத்தம் 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற பகுதிகளில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![கோவை: கனமழை காரணமாக காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட 193 பள்ளிகளுக்கு விடுமுறை! Due to heavy rains 193 schools under Karamadai union have been given holiday in coimbatore கோவை: கனமழை காரணமாக காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட 193 பள்ளிகளுக்கு விடுமுறை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/06/ce06ff9b0bf9713952dde56b4bdf08ab1694002254821102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 35 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, சிவகங்கை, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை,விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றிரவு கோவை மாநகரப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடி வருகிறது. இதனிடையே கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் மழையின் காரணமாக விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். காரமடை ஒன்றியம் மற்றும் மேட்டுப்பாளையம் உட்பட மொத்தம் 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற பகுதிகளில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கனமழை காரணாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)