மருதமலை கோயிலில் அதிரடி மாற்றம்! செல்போன் பயன்பாட்டிற்கு தடை: பக்தர்கள் அதிர்ச்சி!
மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகிற 10.03.2026 தேதி (நாளை) முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமை பெற்றது கோவை மாவட்டம். சிறு, குறு நிறுவனங்களில் முதுகெலும்பாக கோவை உள்ளது. குறிப்பாக கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மருதமலை கோயில் உள்ளது. அங்கு நாளை முதல் அதிரடி மாற்றமாபக்தர்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் பேசவும், வீடியோ போட்டோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி முருகன் கோயிலுக்கு கிட்டத்தட்ட அறுபடை வீடுகளுக்கு இணையான பக்தர்கள் செல்கின்றனர். இதனால் இதை முருகனின் 7வது படை வீடு என்றும் பக்தர்கள் அழைப்பார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகிறார்கள். தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலை செல்கிறார்கள். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் கோயில்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வார விடுமுறை நாட்களில் மலைப் பகுதிக்கு கார்களில் செல்ல தடை உள்ளது. தற்போது அடுத்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டம், மருதமலை கோயில் வரும் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம். மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகிற 10.03.2026 தேதி (நாளை) முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. ராஜகோபுரம் நுழைவாயிலில் இருந்து ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணியசுவாமி சன்னதி, பாம்பாட்டி சித்தர் சன்னதி உட்பட அனைத்து சன்னதிகள் மற்றும் திருக்கோயில் வளாகத்திற்குள், கைப்பேசி (செல்போன்) பேசவும். புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. செல்போன் தடை செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ராஜகோபுரம் நுழைவாயிலில் நுழைவதற்கு முன் தங்களது கைப்பேசியினை சுவிட்ச் ஆப் செய்து விட்டு உள்ளே வரவும்.
இந்த நடவடிக்கைக்கு அனைத்து பக்தர்களும் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்து, ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் மருதமலை செல்லும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த தடை விதிமுறை குறித்து பக்தர்கள் ஆத்திர அவசரத்திற்கு யாரையும் தகவல் தொடர்பு கொள்ள முடியாது" என கூறுகிறார்கள். ஆனால் மருதமலை கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள். இதில் சிலர் போட்டோ எடுக்கிறோம் என்று பக்தர்களுக்கு இடையூறு செய்கிறார்கள். கோயிலின் மாண்பை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்தினர் சார்பில் கூறப்படுகிறது.























