CBI அதிகாரி என நடித்த மர்ம நபர்… கோவையில் முதியவரிடம் ₹20 லட்சம் பறிப்பு...
கோவையில் “டிஜிட்டல் கைது” என மிரட்டிய சைபர் மோசடி கும்பல்,63 வயது முதியவரிடம் ரூபாய் 20 லட்சம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூபாய் 20 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் ஒருவர் வார்ப்பட்ட தொழில் செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை மும்பை சி.பி.ஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், “உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதனால் உங்கள் வங்கி கணக்கை பரிசோதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கு அந்த முதியவர், “நான் யாருக்கும் பணம் அனுப்பவில்லை” என்று பதிலளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் “உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம். நாங்கள் கூறும் வரை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. மீறினால் ஆயுதம் ஏந்திய போலீசார் உங்களை கண்காணித்து வருகிறார்கள்” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், “உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் கணக்கிற்கு அனுப்புங்கள். சரிபார்த்த பிறகு திருப்பி அனுப்பிவிடுகிறோம். இதை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது” என கூறி அச்சுறுத்தியுள்ளார். இதனால் பயந்துபோன முதியவர், தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 20 லட்சத்தை அந்த நபர் கூறிய கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
பின்னர் மூன்று நாட்கள் யாரும் தொடர்பு கொள்ளாததால் சந்தேகம் அடைந்த அவர், அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் மோசடிக்கு ஆளானது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், “டிஜிட்டல் கைது என்ற நடைமுறை எதுவும் இல்லை. பொதுமக்கள் இதுபோன்ற மோசடி அழைப்புகளை நம்ப வேண்டாம்” என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Before You Go
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















