முதல்வர் விஜய் சர்கார் ஆக்ஷன் மோடு... ஒரே அடியில் 65 டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு...
மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டம் தெற்கு மற்றும் வடக்கு என இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி கோவை தெற்கு பகுதியில் 128 கடைகளும், கோவை வடக்கு பகுதியில் 156 கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மொத்தமாக 254 டாஸ்மாக் கடைகள் மாவட்டத்தில் உள்ளன.
அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே விதிமுறைகளை மீறி 69 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதில் கோவை வடக்கு பகுதியில் 48 கடைகளும், தெற்கு பகுதியில் 21 கடைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த கடைகளை மூடும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை உட்பட நான்கு கடைகள் நேற்று மூடப்பட்டன. மீதமுள்ள 65 கடைகளையும் அடுத்த 15 நாட்களுக்குள் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள மதுக்கடைகள் அகற்றப்படுவது சமூக நலனுக்கான முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















