![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கோவை கார் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
என்.ஐ.ஏ விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் உள்துறை அமைச்சகத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.
![கோவை கார் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு Central government orders nia to investigate Coimbatore car blast case TNN கோவை கார் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/27/9001adb9c4c2b35e28397702cdc5e4a01666865977215188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோவை மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே கோவை உக்கடம் பகுதியில் உள்ள வின்செண்ட் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் இருந்த ஒரு மடிக்கணினியை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கி தந்தது தெரியவந்ததை அடுத்து, அப்சர்கானை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். இதனால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. இதனிடையே தேசிய புலனாய்வு முகமை டிஜஜி வந்தனா மற்றும் எஸ்.பி. ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். காவல் துறை அதிகாரிகளிடம் இந்த வழக்கு தொடர்பான விபரங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேட்டறிந்தனர். இந்நிலையில் தமிழக அரசு அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. என்.ஐ.ஏ விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் உள்துறை அமைச்சகத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலானய்வு அமைப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)