சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக, தமிழகம், கேரளா, பெங்களூருவில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏ.பத்மகுமார் ஆளும் சி.பி.எம் கட்சியில் நேரடியாக பதவியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டார். விஜயகுமாரும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர். கே.பி.சங்கரதாஸ் சி.பி.ஐ கட்சியை சேர்ந்தவராவார். சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறை மேற்கூரை, துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களில் தங்கத் தகடு பதிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா 1998-ம் ஆண்டு சுமார் 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தார். இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் துவார பாலகர்கள் சிலையில் உள்ள செம்புத் தகடுகள் மீது தங்கம் பதிக்கும் திருப்பணிக்கு உபயம் வழங்கியதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது.
மேலும், அந்தக் கவசங்களை பராமரிப்புப் பணி செய்து தருவதாகக்கூறி தேவசம்போர்டு அதிகாரிகள் முன்னிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி சென்னைக்கு கொண்டு சென்றார் உன்னிகிருஷ்ணன் போற்றி. நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்காமல் விதிகளை மீறி தங்க கவசங்கள் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த கவசங்கள் சபரிமலை சன்னிதானத்துக்கு திரும்ப கொண்டுவரப்பட்டன. அப்போது அந்த தங்க கவசங்களில் சுமார் 4 கிலோ எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விஜய் மல்லையா 1999-ம் ஆண்டு ஏற்கனவே தங்கம் வழங்கிய நிலையில், மீண்டும் தங்கம் பதிக்க வேண்டிய அவசியம் என்ன? பழைய தங்கம் ஆவியாகிவிட்டதா என உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைத்தது உயர் நீதிமன்றம். கருவறையின் முன்பகுதியில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளின் செம்பு கவசங்கள் மீது பதியப்பட்ட தங்கம் மற்றும் கருவறை திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டதாக சிறப்பு விசாரணைக்குழு கண்டுபிடித்து தனித்தனியாக 2 வழக்குகள் பதியப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பராமரிப்பு பணிக்கு தலைமை தாங்கிய உன்னி கருஷ்ணன் போற்றி, சபரிமலையில் பணியாற்றிய நிர்வாக அதிகாரி முராரி பாபு , செயல் அலுவலர் சுதீஷ்குமார், திருவாபரணம் ஆணையர் பைஜூ, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் ஆணையர் மற்றும் தலைவர் வாசு , தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்ம குமார் , நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், பெல்லாரி ஜுவல்லரி உரிமையாளர் கோவர்தன், தந்திரி கண்டரரு ராஜீவரரு உட்பட 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதே நேரத்தில் கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து , சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று தமிழகம், கேரளா, பெங்களூருவில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கேரளாவில் உன்னிகிருஷ்ணன் வீடு, திருவனந்தபுரத்தில், தேவசம் வாரியத் தலைமையகம் மற்றும் முன்னாள் தேவசம் வாரியத் தலைவர் பத்மகுமாரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தங்க முலாம் பூசும் நிறுவனத்திலும் சோதனை நடந்தது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.





















