தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் குழப்பம் ? – நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு...
தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் உள்கட்சி பிரச்சினைகள் நிலவி வருவதால் அதுகுறித்து கருத்து சொல்ல முடியாது என்று கோவையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில், கட்சியின் மையக் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தலுக்கு பிந்தைய கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நாளை தனியாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
கோவையில் மையக் குழு கூட்டம் நடத்தப்படுவதற்கான காரணம் குறித்து பேசிய அவர், “இதற்கு எந்த பிரத்தியேக காரணமும் இல்லை. கடந்த முறை சென்னை நகரில் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது கோவையில் நடத்தப்படுகிறது” என்றார்.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “தேர்தலுக்கு பிறகு அதிமுக மற்றும் பாஜக இடையேயான உறவு அமைதியாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஆனால் தேர்தலுக்கு பிறகு அக்கட்சியில் உள்கட்சி பிரச்சினைகள் நிலவி வருவதால், அதுகுறித்து எதுவும் கருத்து சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், “தேர்தல் காலத்தில் அதிமுக ஒத்துழைக்கவில்லை என்ற எந்த குற்றச்சாட்டும் இல்லை. அது தொடர்பாக மையக் குழு கூட்டத்திலும் எந்த விவாதமும் நடைபெறவில்லை” என்றும் கூறினார். அதிமுக உள்கட்சி பிரச்சினையை தீர்க்க பாஜக உதவுமா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றார். இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















