“ஆளும் கட்சி vs எதிர்க்கட்சி வேறுபாடு” - வேட்புமனு தாக்கல் செய்து அம்மன் அர்ஜுனன் அதிரடி குற்றச்சாட்டு...
வேட்புமனு தாக்கலுக்கு பின், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடம் போலீஸ் பாகுபாடு காட்டப்படுவதாக அம்மன் அர்ஜுனன் குற்றம்சாட்டினார்.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக அவர், அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து மனுவைச் சமர்ப்பித்தார்.
போலீஸ் செயல்பாட்டில் பாகுபாடு?
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அம்மன் அர்ஜுனன், வேட்புமனு தாக்கல் செய்ததில் மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்தார். தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், தமக்கு எந்தவித பயமும் இல்லை என்றும் கூறினார். காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அனைவரிடமும் சமமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடம் வேறுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டினார்.
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குறித்து அவர் விமர்சனம் முன்வைத்து, வெளியூரிலிருந்து ஆதரவாளர்களை கொண்டு வரப்படுவதாக குற்றம் சாட்டினார். கோவையில் உள்ள திமுக தொண்டர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல், வெளியூர் நபர்களை ஈடுபடுத்துவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தேர்தல் தொடர்பாக சில முறைகேடுகள் உள்ளதாக கூறிய அவர், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்களை ஏமாற்றியதாகவும், இந்த முறை மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
கோவை வளர்ச்சி குறித்து பேசுகையில், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, கோவையை மீண்டும் தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்” ஆக மாற்றுவோம் என்றார். புதிய தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே தங்களின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















