வீடு வாங்கியவருக்கு அதிர்ச்சி !! நில உரிமையாளர் சிக்கலால் ரூ.1 கோடி சிக்கல் , தீர்ப்பு என்ன ?
வீடு விற்பனையில் தாமதமாக செயல்பட்ட கட்டுமான நிறுவனம் , ஏற்கனவே வசூலித்த 51.12 லட்ச ரூபாயை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என ‘ரெரா' எனப்படும் ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு

நில உரிமையாளர் கொடுத்த பொது அதிகாரம் ரத்து
சென்னை அம்பத்துாரில் " விஜிஎன் பிராப்பர்ட்டி டெவ லப்பர்ஸ் " நிறுவனம் சார்பில் விஜிஎன் பென்னட் பார்க் எக்ஸ்டென்ஷன் என்ற பெயரில் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் வீடு வாங்க, கயல் கொடி என்பவர், 2019 - ல் முன் பதிவு செய்தார். இதற்காக பல தவணைகளில் 1.02 கோடி ரூபாயை அவர் செலுத்தியுள்ளார்.
குடியிருப்பு திட்டத்தில் நில உரிமையாளர், கட்டுமான நிறுவனத்துக்கு அளித்த பொது அதிகாரத்தை ரத்து செய்ததால் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பணம் செலுத்தியவருக்கு விற்பனை பத்திரம் பதிவு செய்து தருவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து அத்திட்டத்தில் வீடு வாங்குவதில் இருந்து விலக கயல்கொடி முடிவு செய்த நிலையில் பாதி பணத்தை திருப்பித் தர கட்டுமான நிறுவனம் மறுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கயல்கொடி ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தார். புகார் மீதான விசாரணையில் , ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு ;
ஒப்பந்தப்படி மனுதாரர் 1.02 கோடி ரூபாயை கட்டுமான நிறுவனத்துக்கு செலுத்தி உள்ளார். வீடு ஒப்படைப்பதற்கான அடுத்தக் கட்ட பத்திரங்கள் பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் பணத்தை முழுமையாக பெற தகுதி உடையவர். இதில், 51.12 லட்ச ரூபாயை காசோலையாக கட்டுமான நிறுவனம் திருப்பி கொடுத்து இருக்கிறது.
மீதி தொகை மற்றும் வட்டி சேர்த்து 51.12 லட்ச ரூபாயை மனுதாரருக்கு, 30 நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் திருப்பித் தர வேண்டும். வழக்கு செலவுக்காக 25,000 ரூபாயையும் அளிக்க வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















