4 பெண் தூய்மைப் பணியாளர்களின் உண்ணாவிரத போராட்டம் - திலகபாமா நேரில் ஆதரவு
PMK Thilagabama: தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரை, பாமக பொருளாளர் திலகபாமா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

PMK Thilagabama: சென்னையில் தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 4 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்
கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சென்னை மாநகராட்சியால் பணி மறுக்கப்பட்ட 1,953 தூய்மைப் பணியாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தநிலையில், எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அம்பத்தூரில் 4 பேருக்கு மட்டும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,கடந்த திங்கட்கிழமை முதல் ஜெனோவா, பாரதி, கீதா மற்றும் வசந்தி ஆகிய நான்கு பெண்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
நேரில் சந்தித்து ஆதரவு
இந்நிலையில், பாமக பொருளாளர் திலகபாமா உண்ணா விரதம் இருப்பவர்கலை நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தார். தூய்மைப்பணி தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களையும் எழுப்பினார். தமிழக மக்களின் அப்பா என தன்னை குறிப்பிட்டுக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் எளிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென திலகபாமா வலியுறுத்தினார். திமுக அரசு தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத்தயங்குவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டம்:
நியாயமான ஊதியம், தனியார்மாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 நாட்களுக்கும் மேலாக நீடித்த போராட்டத்தின் போது, அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லை. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் முடிவில், ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்ததோடு, அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்றவும் உத்தரவிட்டது. அந்த போராட்டத்தின் நீட்சியாகவே தற்போது, உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் சென்னை அம்பத்தூரிl 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





















