செவிலியர்கள் போராட்டம் ; இந்த பிரச்சனைக்கு ஜெயலலிதா அரசே காரணம் !! மா.சுப்ரமணி விளக்கம்
செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே ஜெயலலிதா அரசு தான். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான் ஒப்பந்த செவிலியர் முறை கொண்டு வரப்பட்டது

சிறப்பு மருத்துவ முகாம்
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் அருகே நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் ;
தமிழகம் முழுவதும் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தை அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாம் மட்டும் அல்ல. மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னை உள்ளிட்ட 45 இடங்களில் நடைபெற்று வருகிறது. 11,42,055 பொது மக்கள் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர்.
SIR பணி - ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்டுள்ளது
எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கப்பட்டதற்கு முன்பே இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது. நாங்களும் நீதிமன்றத்தை நாடினோம். குறுகிய கால இடைவெளியில் இது நடைபெற்றுள்ளது. தி.மு.க.வை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் ஜனநாயகத்தை முழுவதும் கடைப் பிடித்தது. சோழிங்கநல்லூரில் மட்டும் 2.50 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் 1.86 லட்சம் வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 12 ஆயிரம் வாக்குகள் ஆவணங்கள் இல்லை என நிராகரிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை ஏற்று கொள்ள முடியாது
செவிலியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நிறைவடைந்து சென்று விட்டார்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது என நீங்கள் கேட்பது உங்களது ஆசையாக இருக்கலாம். நேற்று அவர்களிடம் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களின் கோரிக்கை என்பது ஒரு சில மட்டுமே. அவற்றில் ஓரிரு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என சொல்லி இருக்கிறோம். இன்னொரு கோரிக்கை என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
காலி பணியிடங்களே இல்லாத நிலைமை இப்போது இருக்கிறது. 169 காலிப் பணியிடங்கள் மட்டுமே செவிலியர் பணிகளுக்கு உள்ளது. அந்தப் பணியிடங்களை இரண்டு நாட்களில் நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து விட்டது. அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வந்த பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என சொல்கிறார்கள். 3,614 பேருக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. பணியிடங்கள் மட்டும் 1200 புதிதாக உருவாக்கி உள்ளோம்.
பிரச்சனைக்கு காரணமே அதிமுக தான்
ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்த போது தான் ஒப்பந்த செவிலியர் பணியிடம் என உருவாக்கப்பட்டது. இன்று எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் அறிக்கை விடுவது ஒரு மாதிரி உள்ளது. இந்த பிரச்சனைக்கு காரணமே அதிமுக தான். 3,783 ஒப்பந்த செவிலியர்கள் இந்த அரசு வந்த பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது கோரிக்கை இன்னும் கூடுதல் காலி பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பது தான் என்றார்.





















