சென்னையில் பள்ளி மாணவன் வகுப்பறையில் மரணம்: செல்போன் காரணமா? - அதிர்ச்சியில் பெற்றோர்!
"சென்னை குன்றத்தூரில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது"

குன்றத்தூரில் அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திடீரென மயங்கி விழுந்த மாணவர்
சென்னை அடுத்த குன்றத்தூர், மணிகண்டன் நகர், நடைபாதை தெருவை சேர்ந்தவர் சரவணன். சரவணன் மகன் வெங்கடேசன் (16), குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார். மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மாணவன் வெங்கடேசனை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்து போனார்.
செல்போன் காரணமா என விசாரணை ?
இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து போன வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பள்ளி விடுமுறை நாட்களில் அதிக அளவில் வெங்கடேசன் செல்போனை பயன்படுத்தி வந்ததாகவும், பள்ளிக்கு செல்லும் நாளில் தலை வலிப்பதாக கூறிவிட்டு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவன் இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து செல்போன் பயன்படுத்தினால் என்ன ஆகும் ?
தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் உடல்நல மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். செல்போன் பயன்படுத்துவதால் மனச்சோர்வு, பதற்றம், செல்போனுக்கு அடிமை ஆகுதல் உள்ளிட்ட மனநல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் உடலளவில் கண் சோர்வு, தூக்கமின்மை உள்ளிட பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்தால் கழுத்து வலி உள்ளிட்டவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் சொல்கின்றனர். எனவே செல்போனை பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அளவோடு பயன்படுத்த வேண்டும் என்பதை மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.





















