நீர்கசிவு கையாளுவதில் குழப்பம்
பொதுவாக புதிய கட்டடம் கட்டும் போது அதில் எந்த விதத்திலும் நீர்க் கசிவு ஏற்படக் கூடாது என்று தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கட்டடங்களில் நீர்க் கசிவு தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன, அதை எப்போது, எப்படி கையாள்வது என்பதில் தான் குழப்பம் ஏற்படுகிறது.
கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் முறையாக பூச்சு வேலை மேற்காள்ளப்பட வேண்டும். சுவர்கள் மற்றும், துாண், பீம், தளம் போன்ற அமைப்புகளில் மேற்பரப்பில் கலவை நன்கு ஒட்டும் வகையில் உரிய வழிமுறைகளை கடைபிடித்து பூச்சு வேலை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, பூச்சு வேலை முறையாக நடந்தாலும், நல்ல முறையில் வண்ணம் அடிக்கும் பணிகளை மேற் கொள்ள வேண்டியது அவசியம்.
இதில் சுவர்களில் ஆரம்ப நிலையிலேயே பட்டி பார்ப்பது போன்ற நடவடிக்கைகளுடன் நீர்க் கசிவு தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். மழைக் காலத்தில் கட்டடத்தின் மேற்பரப்பில் தண்ணீர் நிற்காமல் பார்த்து கொள்ள உரிய நடவடிக்கை எடுத்த நிலையிலும் நீர்க் கசிவு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படுகிறது.
குறிப்பாக கட்டடங்களில் மழைக் காலத்தில் பெரிய அளவுக்கு நீர்க்கசிவு ஏற்படுவது மட்டும் தான் பிரச்னை என்பதில்லை. சுவர்கள், தளங்களில் ஓதம் எனப்படும் ஈரப்பதம் ஏற்படுவதும் நீர்க்கசிவின் வெளிப்பாடு தான் என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.
கட்டடத்தின் வயது அடிப்படையில் அதில் ஏற்படும் நீர்க் கசிவு பிரச்னைகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் வேறுபடும். உங்கள் வீட்டுக்கான கட்டடத்தில் , மழைக் காலத்தில் ஏதாவது ஒரு பகுதியில் ஓதம் ஏற்பட்ட அடையாளம் காணப்பட்டால், உடனடியாக அலர்ட் ஆக வேண்டும். முதலில் அதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு வாயிலாக கண்டு பிடித்து அதை சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
பாதிப்புக்கான காரணம், அதன் தாக்கம் என்ன என்பதை முழுமையாகவும், முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இதன் பின் ஓதம் ஏற்பட்ட இடத்தில் சுவரின் மேற்பூச்சு தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்து சிரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
புதிய கட்டடம் என்றால் அதில் ஓதம் ஏற்பட்ட முதல் முறையிலேயே நீங்கள் அலெர்ட் ஆகி விட்டால் அதை சரி செய்யும் போது, சிவில் பொறியாளர் வழிகாட்டுதலுடன் செயல்பட வேண்டும். இதில் சுவரின் மேற்பூச்சை அகற்றாமல் தகரம் வைத்து நன்கு சுரண்டி, அதன் மேல் டாம்புரூப் எனப்படும் நீர்க் கசிவு தடுப்பு பூச்சுகளை பூச வேண்டும். ஆனால், பழைய கட்டடம் என்றால் அதில் நாள்பட்ட ஓதம் பிரச்னையால் சுவரின் மேற்பூச்சு உதிரும் நிலை இருக்கலாம்.
இத்தகைய சூழலில், மேற்பூச்சை உடைத்து அப்புறப்படுத்தி, அங்கு நீர்க்கசிவு தடுப்பு ரசாயனங்கள் சேர்த்த கலவை பயன்படுத்தி புதிதாக பூச்சுவேலை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள். புதிய கட்டடத்தில் ஓதம் ஏற்பட்ட முதல் முறையிலேயே நீங்கள் அலெர்ட் ஆகி, கட்டுமான பொறியாளர் வழிகாட்டுதலுடன் அதை முழுமையாக சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.