ஆதரவற்றோரை தேடிச்சென்று உணவளிக்கும் தன்னலமற்ற இளைஞர்கள் : சென்னையில் ஒரு நெகிழ்ச்சி
சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தேடி சென்று உணவு பொட்டலங்களை வழங்கும் இளைஞர்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்கள்
![ஆதரவற்றோரை தேடிச்சென்று உணவளிக்கும் தன்னலமற்ற இளைஞர்கள் : சென்னையில் ஒரு நெகிழ்ச்சி Donating free food for road side people chennai youths good work. ஆதரவற்றோரை தேடிச்சென்று உணவளிக்கும் தன்னலமற்ற இளைஞர்கள் : சென்னையில் ஒரு நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/21/ed704972353469487fc6101ce91e31e3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=320)
இளைஞர்கள் என்றாலே சமூகவலைத்தளம், ஆன்லைன் விளையாட்டு என மூழ்கிக் கிடைக்கும் காலச்சூழலில், இப்படியும் சில இளைஞர்கள் மற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகின்றனர். பிஜே 360 தனியார் தன்னம்பிக்கை மற்றும் பீனிக்ஸ் ஸ்டார் அறக்கட்டளை இணைந்து சுமார் 250 உணவு பொட்டலங்களை ஏழை, எளிய ஆதரவற்ற மக்களுக்கு வழங்கி வருகின்றனர். சென்னையில் கொரோன காலம் மற்றும் ஊரடங்கு நிலை, வாழ்விடம் இல்லாதவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி உள்ளது. வழக்கமாக செயல்படும் பல கடைகள், உதவும் தளங்கள் மூடப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆதரவற்றோர், செயல்பட முடியாதவர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மூலம் உணவளிக்கும் உன்னதமான சேவையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தற்போது இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள பிஜே 360 தனியார் தன்னம்பிக்கை மற்றும் பீனிக்ஸ் ஸ்டார் அறக்கட்டளையும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் வசிப்போர் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பயன் பெறுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலாஜி ஜெயராஜ் "தொடர்ச்சியாக தங்கள் தன்னம்பிக்கை பயிலகத்தில் பயிலும் மாணவர்களோடு சமூகசேவையில் ஈடுபட்டு வருகிறோம், இதனால் பலர் பயனடைகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய இளைஞர் குழுவைச் சேர்ந்த மதன் "சமூகசேவையில் ஈடுபடுவது மிக பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது, எங்களை தொடர்ந்து மற்ற இளைஞர்களும் இதில் வந்து பங்கு பெறுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக" தெரிவித்தார்.