Chennai Water ATM: சென்னை மக்களே; இனி வழியில தண்ணிக்கு கஷ்டப்பட வேணாம் - வருது குடிநீர் ஏடிஎம், எங்கெங்க தெரியுமா.?
சென்னை மக்களுக்கு 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில், 50 இடங்களில் தண்ணீர் ஏடிஎம்-களை நிறுவ சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அது எங்கெங்கு வருகிறது தெரியுமா.?

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில், அவர்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிக்கும் வகையில், 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கும் ஏடிஎம்-களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகை
சென்னையில், வெளியூர்களிலிருந்து வேலை தேடி வருவோர், இங்கு வேலை கிடைத்து செட்டில் ஆவதால், வருடம்தோறும் மக்கள் தொகை அதிரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக, சென்னைக்கு அருகிலேயே துணை நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வது அத்தியாவசியமாகிறது.
இதற்காக, தமிழ்நாடு அரசு, குறிப்பாக சென்னை மாநகராட்சி தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் விதமாக, புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளது சென்னை மாநகராட்சி.
இதற்காக, 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில், குடிநீர் ஏடிஎம்-களை நிறுவ சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
எந்தெந்த இடங்களில் குடிநீர் ஏடிஎம்-கள் நிறுவப்படும்.?
இந்த குடிநீர் ஏடிஎம்-கள், சென்னை கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், மார்கெட் பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்கெட் பகுதி, சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா உள்ளிட்ட 40 இடங்களில் குடிநீர் ஏடிஎம்-களை நிறுவுவதற்கான பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆர்.ஓ மற்றும் யூவி முறைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்கள் பெற முடியும்.
ஏடிஎம்-களில் பெறக்கூடிய நீரின் அளவு என்ன.?
சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ள குடிநீர் ஏடிஎம்-களில், 2 அளவுகளில், அதாவது, குறைந்தபட்சம் 150 மில்லி லிட்டரும், அதிகபட்சமாக 1 லிட்டர் தண்ணீரையும் குறைந்த விலையில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும். தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் சென்று, குடிநீர் ஏடிஎம்-ல் கட்டணம் செலுத்தி, சுத்தமான குடிநீரை மக்கள் நிரப்பிக் கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் இணைந்து செயல்படுத்தும் இந்த குடிநீர் ஏடிஎம், 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்துவது எப்படி.?
பேட்டரி மூலம் இயங்கும் இந்த குடிநீர் ஏடிஎம்-களில் கட்டணம் செலுத்த, ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்கள் பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயனாளர்கள் தாங்கள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தும் தொகையில் எவ்வளவு பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள, பரிவர்த்தனைகளின் விவரங்களை பார்க்க முடியும். தீண்ணீருக்கான ரீசார்ஜ் மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்கள் குறுந்தகவல் மூலம் பயனாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.





















