ஜிஎஸ்டி இருந்தும் சேவை வரி வசூலிக்கப்படுகிறதா? செலுத்தத் தேவையில்லை என்கிறது சட்டம்! செய்ய வேண்டியது என்ன?
2022 இன் ஆர்டரின் அடிப்படையில் சேவைக் கட்டணங்களைச் செலுத்துமாறு எந்தவொரு வாடிக்கையாளருக்கும் எந்த உணவகமும் அழுத்தம் கொடுக்க முடியாது என்று சமீபத்தில் நுகர்வோர் மன்றம் ட்வீட் செய்தது.

ஜிஎஸ்டி (GST) சரக்கு மற்றும் சேவை வரிதானே (Goods and Service Tax), பிறகெதற்கு சேவை வரி (Service Tax) என்று பில்லில் தனியாக ஒரு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று என்றாவது ஒருநாள் எதாவது ஒரு பில்லை பார்க்கும்போது உங்களுக்கு தோன்றி இருந்தால் இது உங்களுக்கான செய்திதான், தொடர்ந்து படியுங்கள்.
ஹோட்டல்களில் சேவை வரி
பல உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டிக்கு மேல் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்துமாறு கூற அதனை எதிர்த்து கேட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில், நொய்டாவில் ஒரு உணவகத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் கூடுதல் சேவைக் கட்டணம் செலுத்த மறுத்ததால், அது சண்டைக்கு வழிவகுத்த சம்பவம் கூட நடைபெற்றது. சேவைக் கட்டணம் விரும்பினால் மட்டும் கொடுக்கலாம் என்பது பல நுகர்வோருக்குத் தெரியாது, ஆனால் அதுதான் உண்மை. நுகர்வோர் உரிமைகளின்படி, சேவை வரி வசூலிக்க அழுத்தம் கொடுத்தால், அந்த உணவகம் குறித்து வாடிக்கையாளர் புகார் செய்யலாம். பல உணவகங்கள் வாடிக்கையாளர்களை 2022 ஆம் ஆண்டுக்கான ஆர்டரைக் கூறி தவறாக வழிநடத்துகின்றன. 2022 இன் ஆர்டரின் அடிப்படையில் சேவைக் கட்டணங்களைச் செலுத்துமாறு எந்தவொரு வாடிக்கையாளருக்கும் எந்த உணவகமும் அழுத்தம் கொடுக்க முடியாது என்று சமீபத்தில் நுகர்வோர் மன்றம் ட்வீட் செய்தது.

நீதிமன்றம் கூறுவது என்ன?
ஏப்ரல் 12, 2023 அன்று டெல்லி உயர் நீதிமன்றமும் இதையே கூறியது. நீதிபதி பிரதீபா சிங் தனது தீர்ப்பில், 2022 ஆம் ஆண்டு உத்தரவுகளை பயன்படுத்தி, எந்த உணவகமும் தங்கள் வாடிக்கையாளருக்கு சேவை வரி செலுத்தக்கோரி அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் கூறினார். இது குறித்து நுகர்வோர் மன்றமும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) சேவைக் கட்டணங்கள் அரசாங்கத்தால் விதிக்கப்படவில்லை என்று கூறியது. அதோடு ஜூலை 4, 2022 அன்று சேவைக் கட்டணங்களை முழுமையாகத் தடை செய்வதாக அறிவித்தது. 2022 தீர்ப்பின் அடிப்படையில் உணவகங்கள் கட்டணம் விதிக்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஏப்ரல் 12, 2023 அன்று தெளிவுபடுத்தியது. கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உணவகங்களுக்கு ஆதரவாக இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?
"ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் எந்த சேவை கட்டணத்தையும் வசூலிக்க முடியாது. அதை வேறு எந்த பெயரிலும் சேகரிக்க முடியாது. ஜிஎஸ்டியை விதித்த பிறகு, அவர்கள் பில்லில் வேறு எந்தக் கட்டணத்தையும் விதிக்க முடியாது" என்பதுதான் வழிகாட்டுதல்கள் கூறும் உண்மைகள். CCPA குறிப்பிட்டது "உணவகங்கள் ஏற்கனவே தங்கள் உணவு மற்றும் பானங்களில் சேவை கூறுகளை உள்ளடக்கியுள்ளன. பொருட்கள் மற்றும் சேவைகளின் முழு செலவையும் உள்ளடக்கும் வகையில் உணவு விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஹோட்டல் மற்றும் உணவகப் பொருட்களின் விலை நிர்ணயத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஒரு வாடிக்கையாளர் மெனுவிலிருந்து ஒரு பொருளை ஆர்டர் செய்தால், மெனுவில் பட்டியலிடப்பட்டுள்ள தொகையையும் வரிகளையும் செலுத்த ஒப்புக்கொள்கிறார். அதற்கு மேல் எதுவும் வசூலிப்பது என்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகக் கருதப்படும்," என்றது.

ஹோட்டலில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் என்ன செய்வது?
உங்கள் பில்லில் கூடுதல் கட்டணங்கள் இருப்பதைக் கண்டால், மேலாளரிடம் பேசி, விதிக்கப்பட்ட கட்டணங்களை அகற்றும்படி அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் அதை அகற்ற மறுத்து, அதற்கு பணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தினால், பில்லின் நகலை வைத்து, நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யுங்கள்.
புகாரை எவ்வாறு பதிவு செய்வது?
நுகர்வோர் மன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உங்கள் புகாரை பில்லுடன் சேர்த்து பதிவு செய்யுங்கள். மேற்படி விஷயங்களை மன்றத் துறை கவனித்துக்கொள்ளும்.
ஏன் இதை செய்யவேண்டும்?
உங்களின் உரிமைகள் குறித்து விழிப்புடன் இருப்பது முக்கியம். சில உணவகங்கள் 10% சேவைக் கட்டணத்தை வசூலிப்பதாகக் குறிப்பிடுகின்றன, ஆனால் நீங்கள் அதைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு செலுத்துவதோ செலுத்தாமல் போவதோ அது சொந்த முடிவு. ஆனால் அறியாமையில் யாரும் எங்கும் பணத்தை இழப்பது அது எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் அது சிஸ்டத்தின் மீதான குறைதான். அதனை களைய இதனை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















