Cough Syrup Death: இருமல் டானிக்கால் குழந்தைகள் பலி; அதிர்ச்சி தரும் காரணம்- மருத்துவர் எச்சரிக்கை! மாற்று வழிகள்
இருமல் என்பது உள்ளே இருக்கும் நோய்க்கு அறிகுறியாக விளங்குகிறது. வெறுமனே இருமல் என்பது நோயன்று, அது ஒரு அறிகுறியாகும்.

சமீபத்தில் இருமல் டானிக் குடித்த 16 குழந்தைகள் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இறந்துள்ளனர். அவர்களின் இறப்பிற்கான காரணம் என்ன?
இருமல் டானிக்குகள் குறித்த மத்திய சுகாதாரத்துறையின் புதிய வழிகாட்டுதல்கள் யாது?
இருமல் டானிக்குகள் இல்லாமல் இருமலுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி?
இதுகுறித்து சிவகங்கை பொது நல மருத்துவர் Dr.ஃபரூக் அப்துல்லா தெரிவித்து உள்ளதாவது:
குழந்தைகள் இறந்ததற்கு, சிரப்களில் அசுத்தமாக சேர்ந்த நச்சுப்பொருளான டை எத்திலின் க்ளைகால்/ எத்திலின் க்ளைகால் காரணமாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டு வந்த வேளையில் தற்போது மத்திய சுகாதாரத் துறை, மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவை நடத்திய ஆய்வில் அந்த டானிக்குகளின் மாதிரிகளில் "நச்சுப் பொருள்" இல்லை என்று முடிவு வந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் இறந்த இரண்டு குழந்தைகளின் இறப்புக்கு இருமல் டானிக்கில் டெக்ஸ்ட்ரோமெதோர்ஃபன் (DEXTROMETHORPHAN) எனும் மருந்து இருந்ததே காரணம் என்றும் ஏற்கனவே நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டெக்ஸ்ட்ரோ மெதோர்ஃபன் மருந்து வழங்குவதற்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டிசம்பர் 2023-ல் ஃபினைல் எஃப்ரின்( phenyl ephrine) மற்றும் க்ளோர் ஃபெனிரமின் மேலியேட் (Chlorpheniramine maleate) இவ்விரண்டு மருந்துகளின் கூட்டான இருமல் டானிக்கை நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
யாருக்கெல்லாம் இருமல் டானிக் வழங்கக்கூடாது?
இப்போது, மத்திய சுகாதார சேவை இயக்குநர் டாக்டர். சுனிதா சர்மா அவர்கள் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் டானிக் வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தலில் கூறியிருக்கிறார்.
குழந்தைகளுக்கு குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு வரும் இருமலை மருந்து இல்லாமல் சமாளிக்க முடியும். எனவே மருந்தில்லாத மருத்துவ முறைகளைக் கடைபிடிக்கவும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுவாக இருமல் என்பது மூன்று வகைப்படும்.
முதல் வகை
வறட்டு இருமல்- இந்த வகை இருமல் , தொண்டைப் பகுதியில் வைரஸ் தொற்று ஏற்படுவதால் வரக்கூடும். கூடவே வயிற்றில் உள்ள அமிலம் மேலேறி நெஞ்செரிச்சல் வருவதாலும் ஏற்படலாம். ஒவ்வாமையாலும் வறட்டு இருமல் வரக்கூடும்.
இரண்டாம் வகை
நுரையீரலில்/ கீழ் சுவாசப்பாதையில் தொற்று ஏற்பட்டு சளி உருவாகி சுவாசப்பாதையை அடைத்துக் கொள்ளலாம். அப்போது கெட்டிச் சளியை மெலிதாக்கவும் அதை வெளிக்கொணரவும் உதவும் டானிக்குகள் வழங்கப்படுகின்றன.
மூன்றாவது வகை
இந்த வகையில், நியூமோனியா, ஆஸ்துமா போன்ற நிலைகளில் சுவாசப்பாதை சுருங்கிக் கொண்டு , இன்னும் நுரையீரல் வரை சுவாசப்பாதை அழற்சி ஏற்பட்டு அதனால் இருமல் ஏற்படும். இதற்கு சுவாசப்பாதை விரிவடையச் செய்யும் மருந்துகள் நெபுலைசர் ஆவி மூலம் வழங்கப்படும்.
இப்படியாக இருமல் என்பது உள்ளே இருக்கும் நோய்க்கு அறிகுறியாக விளங்குகிறது. வெறுமனே இருமல் என்பது நோயன்று, அது ஒரு அறிகுறியாகும். இந்நிலையில் மருத்துவர்களை இருமலுக்கு சிகிச்சையாக சிரப்கள் பரிந்துரைக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கும் அதே வேளையில் நமது நாட்டில் இருமல் டானிக்குகள், ஆண்டிபயாடிக் மருந்துகள் போன்றவை பரிந்துரை இல்லாமலே நோயர் சென்று கேட்டாலே மருந்தகங்கள் வழங்கும் நடைமுறை உள்ளது. சட்டப்படி தவறென்றாலும் இது தங்கு தடையின்றி நடக்கும் வழக்கமாக உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் சாதாரண வைரஸ் தொற்றுக்கும் சில மருந்துகளை தாங்களாகவே குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு ( அதில் ஆண்டிபயாடிக்குகள் + இருமல் டானிக்குகள் அடங்கும்) மருத்துவரை சந்திக்கும் வழக்கம் அதிகரித்து விட்டது.
பெற்றோர்கள் ஒருபோதும் குழந்தைகளுக்கோ தங்களுக்கோ சுய மருத்துவம் செய்வது என்றாவது ஒருநாள் ஆபத்தில் முடியலாம். முறையான சிகிச்சை எடுப்பது எப்போதும் நல்லது.

சரி.. இருமல் எனும் அறிகுறியை இருமல் டானிக்குகள் துணை இல்லாமல் வெற்றி கொள்ள முடியுமா?
- வறட்டு இருமல் என்றால்
தேன் ஒரு ஸ்பூன் காலை, மாலை பருகிவரலாம். குறிப்பாக இரவு தூங்கும் முன்பு கொடுக்கலாம். தேன் சுவாசப் பாதையை இதமாக்கி புண்களுக்கு மேல் களிம்பு போல படலம் ஏற்படுத்தி இருமலைக் கட்டுப்படுத்தக் கூடும்.
- நெஞ்செரிச்சலால் இருமல் ஏற்படுமாயின்
நெஞ்செரிச்சலுக்குரிய சிகிச்சை/ இரைப்பைப் புண்ணுக்குரிய சிகிச்சை/ மசாலா/ எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது போன்றவற்றால் இருமல் கட்டுப்படும்.
- அடிக்கடி வெதுவெதுப்பான நீர், சூப், இஞ்சி டீ போன்றவற்றை அருந்துவது தொண்டையை இதமாக்கும். சுவாசப் பாதையை லேசாக விரிவடையச் செய்யும். எனவே இருமல் குறையலாம்.
உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்புளிக்கும்போது இருமல் குறையலாம்.
- சிலருக்கு ஏசி அறைகளில் இருக்கும்போது தொண்டை உள்ளிட்ட சுவாசப்பாதை வறண்டு போய் விடும். இதனையொட்டி புகைச்சல் இருமல் கிளம்பும். நீராவி பிடித்தல் அல்லது ஈரப்பதத்தை அதிகரிக்கும் ஹ்யூமிடிஃபையர் உபயோகிக்கும் போது இருமல் குறையலாம்
- ஏசி அறைகளில் இருப்பவர்களுக்கு அந்த நுண் தூசி காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு இருமல் ஏற்படலாம். ஏசியை முறையாக அடிக்கடி சுத்தம் செய்வது இதை சரிசெய்யக்கூடும்
- சுவாசப்பாதை சுருக்கத்தால் ஆஸ்துமா போன்ற நிலைகளில் நெபுசலைர் மூலம் சுவாசப்பாதை விரிவடையச் செய்யும் மருந்து/ சலைன் / சிறிய அளவில் சுவாசப்பாதை வழியாக செலுத்தும் ஸ்டீராய்டு போன்றவற்றை புகை மூலம் உள்ளிளுக்கும் போது இருமல் குணமாகும்.
இருமலின் காரணம் அறிந்து, இப்படி பல்வேறு முறைகளில் அதைக் கட்டுப்படுத்த முடியும். இருமலின் தன்மை அறிந்து அதற்குரிய சிகிச்சைகளைப் பெற வேண்டும் என்று Dr. ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.






















