37 ஆண்டாக 69% இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளா? நீதிபதி தலைமையில் ஆணையம் தேவை-அன்புமணி!
69% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது, முதலில் பொதுப்போட்டிப் பிரிவுக்கான 31% இடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அதில் சாதி பார்க்கப்படக்கூடாது- அன்புமணி

69% இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியிறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழ்நாடு காவல்துறைக்கு 621 சார் ஆய்வாளர்களை நியமிப்பதில் ஒன்றரை ஆண்டுகளாக நிலவி வந்த குளறுபடிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆன பிறகும் அதை செயல்படுத்துவதில் நடக்கும் குழப்பங்களைப் பார்க்கும் போது கடந்த காலங்களில் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதா? என்ற ஐயம் எழுகிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசு கடைபிடிக்கும் அமைதி கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாடு காவல்துறைக்கு 621 சார் ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் அத்துடன் சேர்த்து தீயணைப்புத் துறைக்கு 129 நிலைய அதிகாரிகளை தேர்ந்தெடுக்கவும் ஆணையிடப்பட்டது. இரு பணிகளுக்கும் தேர்ந்தடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால், அதில் இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்யும்படி ஆணையிட்டது.
69% இடஒதுக்கீட்டை செயல்படுத்திய விதம் தவறு
அதன்படி பழைய பட்டியலில் இருந்து 41 பேரை நீக்கி விட்டு, புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டதாகக் கூறி கடந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி புதிய பட்டியல் ஒன்றை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதையும் ரத்து செய்து விட்ட சென்னை உயர்நீதிமன்றம், உதவி ஆய்வாளர் தேர்வில் 69% இடஒதுக்கீட்டை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் செயல்படுத்திய விதம் தவறு என்றும் தீர்ப்பளித்தது.
மேலும், ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் கண்காணிப்பில் புதிய பட்டியலைத் தயாரிக்கவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி, புதிய பட்டியல் தயாரிக்கப்பட்ட நிலையில், அதிலும் குளறுபடிகள் இருப்பதாக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியமே குற்றஞ்சாட்டியது. அந்தப் பட்டியலை ஏற்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது.
சமூகநீதி பலி தடுத்து நிறுத்தம்
மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், நீதியரசர் பால்வசந்தகுமார் மிகச் சரியாக பட்டியலைத் தயார் செய்திருப்பதாகவும், அந்தப் பட்டியலை அடுத்த ஒரு மாதத்திற்குள் வெளியிடும்படியும் ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் சமூகநீதி பலி கொடுக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதில் வருத்தமும், வேதனையும் அளிக்கும் உண்மை என்னவென்றால், விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகளும், 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 37 ஆண்டுகளும் ஆனாலும் கூட, தமிழகத்தில் உள்ள ஆள்தேர்வு அமைப்புகளுக்கு இட ஒதுக்கீட்டு விதிகளை எவ்வாறு பின்பற்றுவது என்பதே தெரியவில்லை என்பதுதான். இதில் தமிழ்நாட்டை சமூகநீதியின் தொட்டில் என்று வேறு பெருமிதப்படுகிறோம்.
சமூகநீதியின் அடிப்படை
69% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது, முதலில் பொதுப்போட்டிப் பிரிவுக்கான 31% இடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அதில் சாதி பார்க்கப்படக்கூடாது. அதன்பின், பின்னடைவுப் பணியிடங்கள் ஏதேனும் இருந்தால், அவை உரிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்பபட வேண்டும். அதன்பிறகுதான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்கள் உரிய வகுப்பினரைக் கொண்டு நிரப்பட வேண்டும். பொதுப்போட்டிப் பிரிவிலோ, பின்னடைவுப் பணியிடங்களிலோ, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியனலினத்தவர் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்களை இட ஒதுக்கீட்டில் பயனடைந்தவர்களாக கருதக்கூடாது என்பதுதான் சமூகநீதியின் அடிப்படை ஆகும்.
ஆனால், இந்த விதியைக் கூட பின்பற்றாமல் காவல்துறை தலைமை இயக்குனர் நிலையிலான அதிகாரியை தலைவராகக் கொண்ட தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், பொதுப்பிரிவிலும், பின்னடைவுப் பணியிடங்களிலும் நியமிக்கப்பட்டவர்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக கணக்கிட்டது. அதனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய காவல் சார் ஆய்வாளர் பணி பறிக்கப்பட்டது. அந்தக் குழப்பத்தைத்தான் இப்போது நீதியரசர் பால் வசந்தகுமார் சரி செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு விதிகள் தெளிவாக இருந்தாலும், அதிலும் சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் குழப்பங்களை ஏற்படுத்த முயன்று தோற்றுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2020ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர்களை நியமிப்பதிலும் இதே போன்ற விதிமீறல்கள் நடந்தன. அதனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேரும், பட்டியலினத்தைச் சேர்ந்த 16 பேரும் ஆசிரியர்களாகும் வாய்ப்பை இழந்தனர். இதை தொடக்கத்திலேயே பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டியது. ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் முறையீடு செய்தது. ஆனால், எந்த பயனுமில்லை.
எனினும், நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியால் சுட்டிக்காட்டப்பட்ட வழிமுறையை பின்பற்றி புதிய தேர்ச்சிப் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்த வழக்கின் தீர்ப்புதான் வி.கே. சோபனா Vs தமிழ்நாடு அரசு என்றழைக்கப்படும் வழிகாட்டி தீர்ப்பு ஆகும்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைவரும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படைக் கூட தெரியவில்லை. இட ஒதுக்கீட்டில் இந்த அமைப்புகள் பெரும் குளறுபடிகள் செய்ததால் தமிழகமே கொந்தளித்தாலும் கூட, அதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதது போல தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைதி காக்கிறார்கள். சமூகநீதி சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அரசால் அமைக்கப்பட்ட குழு எங்கோ காணாமல் போய்விட்டது.
தமிழ்நாட்டில் உள்ள ஆள்தேர்வு அமைப்புகள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் அடுத்தடுத்து குழப்பங்களைச் செய்வதைப் பார்க்கும் போது, கடந்த காலங்களில் இந்த அமைப்புகள் இட ஒதுக்கீட்டு விதிகளை முறையாக பின்பற்றினவா? என்ற ஐயம் இயல்பாக எழுகிறது. அந்த ஐயத்தைப் போக்க வேண்டியது தமிழ்நாட்டு அரசின் கடமை ஆகும்.
இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா?
எனவே, கடந்த காலங்களில், குறிப்பாக 69% இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டபிறகு, ஒவ்வொரு ஆள்தேர்விலும் அந்த இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.






















