TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
TNPSC Group-1: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது.

TNPSC Group-1: அரசு அறிவித்துள்ள 72 காலிப்பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வில் பங்கேற்க 2.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
குரூப் 1 தேர்வு:
குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, ஜுன் 15ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று நடைபெறும் தேர்வின் மூலம், மாவட்ட துணை கலெக்டர் பதவிக்கு 28 பேர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கு 7 பேர், வணிகவரி உதவி ஆணையர் 19 பேர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பதவிக்கு 7 பேர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 3 பேர், மற்றும் தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிக்கு 6 பேர் என மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
2.49 லட்சம் தேர்வாளர்கள்:
வெறும்72 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். குரூப் - 1 மற்றும் குரூப்-1ஏ தேர்வினை எழுத ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மொத்தமாக 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில் குரூப் 1 பதவிக்கு 2,27,982 பேரும், குரூப் 1ஏ தேர்வுக்கு 6465 பேரும், குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கு சேர்த்து 14849 பேரும் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதன்படி இன்று தேர்வு நடைபெறுகிறது.
தேர்வர்கள் செய்ய வேண்டியவை:
- தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும்
- தேர்வு மையத்தின் அனைத்து நுழைவாயில்களும் தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக மூடப்படும். அதன் பின்னர் வரும் யாரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- காலை 9 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்
- தேர்வின் போது தேர்வர்கள் கருப்பு மை பால் பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
- தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை
- தடை விதிக்கப்பட்ட பொருட்களை வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- முறைகேடுகளில் ஈடுபட்டு சிக்கியவர்களின் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்
- முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள்
- தேர்வு முடிவடையும் 12.30 மணிக்கு முன்பு தேர்வர்கள் யாரும் வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மை தேர்வினை எழுதுவார்கள். அதிலும், தேர்ச்சி பெறுபவர்களில் இருந்து 72 பேர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
44 தேர்வு மையங்கள்:
டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒட்டி மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகா மையங்கள் என 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க 987 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் குரூப் 1 முதல்நிலை தேர்வை 41,094 பேர் எழுதுகின்றனர். இதற்காக சென்னையில் 170 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டை கட்டாயம் தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.






















