"உஷார் மக்களே.. கடைகளில் விற்கும் ORS பாட்டில்களை நம்பாதீங்க!" - தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை
கடைகளில் பாட்டில்கள் மற்றும் கேன்களில் 'ORS' என்ற பெயரில் விற்கப்படும் பல பானங்கள் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதில்லை என்று சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வணிக ரீதியாக விற்கப்படும் போலி ORS பானங்கள் குறித்து பொதுமக்களுக்கு மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்டி வதைக்கும் கோடை வெயில்!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இயல்பான அளவை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளதால், குறிப்பாகப் பிற்பகல் நேரங்களில் வெளியே செல்பவர்களுக்கு நீரிழப்பு, சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் தலைவலி ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலி ORS பானங்கள்: ஆபத்து என்ன?
கடைகளில் பாட்டில்கள் மற்றும் கேன்களில் 'ORS' என்ற பெயரில் விற்கப்படும் பல பானங்கள் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதில்லை என்று சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. "இந்த வணிகப் பானங்கள் குடித்தவுடன் தற்காலிகப் புத்துணர்ச்சியை அளிக்கலாம். ஆனால், உடலில் ஏற்படும் கடுமையான நீரிழப்பைச் சரிசெய்யும் மருத்துவக் குணங்கள் அவற்றுக்குக் கிடையாது. உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ORS பாக்கெட்டுகளை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்," என்று அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
ORS-ல் இருக்க வேண்டிய சரியான அளவு:
முறையான நீரேற்றம் செய்யப்படாவிட்டால், உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஒரு தரமான ORS பாக்கெட்டில் பின்வரும் வேதிப்பொருட்கள் துல்லியமான அளவில் இருக்க வேண்டும்:
-
சோடியம் குளோரைடு: 2.6 கிராம்
-
குளுக்கோஸ்: 13.5 கிராம்
-
பொட்டாசியம் குளோரைடு: 1.5 கிராம்
-
டிரைசோடியம் சிட்ரேட்: 2.9 கிராம்
இவற்றை ஒரு லிட்டர் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரில் கரைத்து, 24 மணி நேரத்திற்குள் பருக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் இலவசம்!
WHO அங்கீகாரம் பெற்ற ORS பாக்கெட்டுகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கின்றன. தனியார் மருந்தகங்களிலும் இவை மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. போலிப் பானங்களைத் தவிர்த்து, அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான ஆலோசனைகள்:
வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ளச் சுகாதாரத்துறை வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்:
-
தண்ணீர், இளநீர், மோர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை அதிகளவு அருந்த வேண்டும்.
-
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்.
-
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
-
ஏதேனும் உடல்நலக் குறைவு அல்லது அவசர உதவி தேவைப்பட்டால் 104 என்ற சுகாதார உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ட்ரெண்டிங் செய்திகள்























