முதுகில் தொல்லை கொடுத்த சூடோமெனிங்கோசெல்.. அரியவகை கட்டி வெற்றிகரமாக அகற்றம் !
தண்டுவடத் திரவம் நிரம்பிய பெரிய கட்டியை அகற்றவும, அரிதான தண்டுவட அறுவைசிகிச்சை குறைபாட்டை சரிசெய்து சாதனை.

எலும்பியல் தண்டுவட மருத்துவக் குழுவினர் 'சூடோமெனிங்கோசெல்' எனப்படும் கட்டியை அகற்றி, தண்டுவட உறையை சீரமைத்தனர்.
முதுகில் கடுமையான வலி
தென் தமிழகத்தின் முதன்மை மருத்துவ மையமாகப் புகழ் பெற்றிருக்கும் மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவர்கள், 60 வயது மூதாட்டியின் கீழ் முதுகில் கடுமையான வலியை ஏற்படுத்தி வந்த சூடோமெனிங்கோசெல் என அழைக்கப்படும் ஒரு பெரிய கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மூளை மற்றும் தண்டுவடத்தைப் பாதுகாக்கும் நிறமற்ற 'செரிப்ரோஸ்பைனல் திரவம்' (CSF) நிரம்பிய இந்த அசாதாரணமான கட்டி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேறு மருத்துவமனையில் செய்யப்பட்ட தண்டுவட அறுவைசிகிச்சையின் (L5-S1 discectomy) பக்கவிளைவாக இந்த பாதிப்பு உருவாகியிருக்கலாம் என்று என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டியூராபிளாஸ்டி
இந்த நோயாளிக்கு கீழ் தண்டுவடப் பகுதியில் (L4-L5 மற்றும் L5-S1) முற்றிய நிலையில் வட்டு தேய்மானமும் இருந்ததால், பாதிக்கப்பட்ட எலும்புகளை இணைத்து தண்டுவடத்தை நிலைப்படுத்தும் கூடுதல் சிகிச்சையையும் மருத்துவர்கள் வழங்கினர். தண்டுவட உறையில் ஏற்பட்ட கிழிசலைச் சரிசெய்யவும், எதிர்காலத்தில் தண்டுவட திரவம் கசிவதைத் தடுக்கவும் 'டியூராபிளாஸ்டி' என்ற சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மேலும், நீண்டகாலமாக இருந்த வீக்கத்தால் முதுகில் பெரிய தசைப் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் அருகில் உள்ள ஆரோக்கியமான சருமம் மற்றும் தசைகளை வைத்து அப்பகுதியை மூடி குணப்படுத்த 'லிம்பெர்க் ஃபிளாப்' என்ற சிறப்பு சிகிச்சையையும் மேற்கொண்டனர். இரண்டு வார மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு, பாதிப்புகளிலிருந்து நோயாளி முற்றிலுமாக விடுபட்டார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு மூன்று மாதங்களில் அவர் தனது அன்றாடப் பணிகளை செய்யும் அளவிற்கு இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பது சிகிச்சையின் வெற்றிகர விளைவை சுட்டிக்காட்டுகிறது.
அரியவகை சிகிச்சை
இது குறித்து எலும்பியல் மற்றும் காய சிகிச்சை துறையின் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர். வெற்றி நல்லதம்பி கூறுகையில், "முதுகில் வீக்கம், இரண்டு கால்களுக்கும் பரவும் கடுமையான முதுகுவலி மற்றும் படுக்கும்போது தலைசுற்றல் ஆகிய பாதிப்புகளுடன் நோயாளி எங்களிடம் சிகிச்சைக்கு வந்தார். இப்பாதிப்புகளால் தூக்கமின்மையோடு அன்றாடப் பணிகளையும் அவரால் செய்ய இயலாத நிலை இருந்தது. எம்.ஆர்.ஐ பரிசோதனையில் அவருக்கு சூடோமெனிங்கோசெல் கட்டி மற்றும் L4-L5, L5-S1 வட்டு தேய்மானம் இருப்பது கண்டறியப்பட்டது. இது சிக்கலான மறு-அறுவைசிகிச்சை தேவைப்படும் மிகவும் அரிதான மற்றும் சவாலான பாதிப்பு நிலையாகும். திரவம் நிரம்பிய அந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றி, தண்டுவட உறையைச் சீரமைத்து, இந்நோயாளிக்கு நீண்டகாலமாக இருந்த வட்டுப் பிரச்னைக்கு தீர்வு கண்டோம். இதன் மூலம் தோல்வியடைந்த முந்தைய அறுவைசிகிச்சையின் குறைபாட்டை சரிசெய்து நோயாளியை குணப்படுத்தியதில் நாங்கள் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம்." என்றார்.
தசைப் பற்றாக்குறை
பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் பி. சுரேஷ் குமார் கூறுகையில், "எலும்பியல் தண்டுவட மருத்துவக் குழுவினர் கட்டியை அகற்றிய பிறகு, அங்கு ஏற்பட்ட தசைப் பற்றாக்குறையைச் சரிசெய்ய நாங்கள் அழைக்கப்பட்டோம். நீண்டகாலமாக இந்தப் பிரச்சனை இருந்ததால், முதுகில் ஒரு பெரிய வெற்றிடம் உருவாகி சருமம் மற்றும் திசுக்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆரோக்கியமான சருமத்தின் மூலம் அப்பகுதியை மூடி, காயத்தை முழுமையாகக் குணப்படுத்த மடல் மறுகட்டமைப்பு செயல்முறை என்ற பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை முறையை நாங்கள் கையாண்டோம்," என்றார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ட்ரெண்டிங் செய்திகள்






















