காது கேளாமை குழந்தைகளுக்கு புதிய வாழ்வு... அரசு மருத்துவமனையில் 145 குழந்தைகளுக்கு புதிய நம்பிக்கை!
காது கேளாமை மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை; விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவர்கள்

பிறவியிலேயே காது கேளாமை மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலம் இயல்பான வாழ்க்கையை வழங்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷன் (7), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அபிம்மா (11) ஆகிய இருவரும் பிறவியிலிருந்தே கடுமையான காது கேளாமை மற்றும் பேச்சுத் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு இருவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து பேச்சுப் பயிற்சி மற்றும் மறுவாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டதால் தற்போது இருவரும் இயல்பாக பேசுவதோடு, கல்வியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அபிம்மா பள்ளியில் முதல் ரேங்க் பெற்று வருவதுடன் பாடல்களையும் பாடி வருகிறார். தர்ஷனும் பள்ளியில் நன்றாக படித்து வருகிறார்.
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகள்
இதுகுறித்து மருத்துவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். அறுவை சிகிச்சையில் பங்கேற்ற மருத்துவர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், "இரு குழந்தைகளுக்கும் 90 சதவீதத்திற்கும் மேல் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகள் பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது" என்றார்.
145 குழந்தைகளுக்கு இதுபோன்ற சிகிச்சை
மேலும், பிறவியிலேயே காது கேளாமை மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தற்போதுள்ள மருத்துவ வசதிகள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் பெற்றோர்கள் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்தினார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 145 குழந்தைகளுக்கு இதுபோன்ற சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற மக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைகள் சத்தத்திற்கு பதிலளிக்காதது, பெயர் சொல்லியும் திரும்பிப் பார்க்காதது, இரண்டு வயதைக் கடந்தும் பேசத் தொடங்காதது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்" என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ட்ரெண்டிங் செய்திகள்






















