‘கொஞ்ச நாள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டேன்’ - ரசிகர்களிடம் வேதனையை பகிர்ந்த விக்ரம்
அது ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கலாம். எல்லோருக்குள்ளோயும் ஒரு ஆள் இருக்கிறார் அது திலீப் என்றார்.

விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் அருண்குமார் ஆகியோர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ரசிகர்களை திரையரங்கில் சந்தித்து வருகின்றனர். இதன்படி சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள பிரபல ராக்ஸ் திரையரங்கில் நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் அருண்குமார் ரசிகர்கள் முன் தோன்றினர். அப்போது ரசிகர்கள் நடிகர் விக்ரமை பார்த்து ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
தொடர்ந்து ரசிகர்கள் முன் பேசிய நடிகர் விக்ரம், ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. வித்தியாசமான படங்களில் நடிக்கணும், எதார்த்தமான சினிமா பண்ணனும் என்று இருந்தேன். அதற்கு ஏற்ற கதையாக வீர தீர சூரன் படத்தின் இயக்குனர் அருண்குமார் அருமையாக எடுத்துள்ளார். இடையில் கொஞ்ச நாள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டேன். தற்போது இந்த படத்தை பார்த்ததும் நீங்கள் முதல் பாகம் எப்போது என கேள்வி கேட்பதிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது என தெரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து ரசிகர்கள் திலீப் கேரக்டர் யார் என கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் அளித்த விக்ரம், அது ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கலாம் எல்லோருக்குள்ளோயும் ஒரு ஆள் இருக்கிறார் அது திலீப் என்றார். அடுத்து துருவ நட்சத்திரம் எப்போது என ரசிகர்கள் கேட்டதற்கு விரைவில் சொல்கிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சேது படத்தின் காதல் வசனத்தை பேசி உற்சாகப்படுத்தினார். இதனிடையே இலங்கையைச் சேர்ந்த பெண் ரசிகை ஒருவர் விக்ரமின் தீவிர ரசிகர் என்று கூறி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

