Thaaikizhavi Review : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள தாய்கிழவி எப்படி இருக்கு..இதோ விமர்சனம்
Thaaikizhavi movie review : சிவகார்த்திகேயன் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்து ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்கிழவி திரைப்படத்தின் விமர்சனம் இதோ

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள தாய்கிழவி படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மேரியன், முத்துக்குமார், ரைச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
குடும்பத்தை வழிநடத்த பெண்கள் அளிக்கும் பெரும் உழைப்பு , பணத்தை காரணமாக வைத்து உறவுகளில் ஏற்படும் பிளவுகள் , மனிதர்களிடையே குறைந்து வரும் அன்பு காட்டுதல் போன்ற பல்வேறு விஷயங்களை தொட்டுச் செல்கிற தாய்கிழவி. மெசேஜ் எல்லாம் பழசு என்றாலும் எக்கச்சக்கமான நகைச்சுவையுடன் தற்கால டிரெண்டை இணைத்து கலகலப்பான ஒரு படமாக உருவாகியுள்ளது தாய்கிழவி
தாய்கிழவி திரைப்பட விமர்சனம்
80 வயதான பவுனுத்தாயின் (ராதிகா ) கணவர் இறந்ததும் அவரது மூன்று மகன்கள் சிங்கம் புலி , அருள்தாஸ் மற்றும் பால சரவணன் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்கிறார்கள். தான் உயிரோடு இருக்கும் வரை தனது சொத்துக்களை தானே அனுபவித்துவிட்டு தான் சாவேன் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிடுகிறார் பவுனுத்தாய். இப்படியான சூழலில் தாய் கிழவி படுக்கையில் விழ அவரை பார்க்க மூன்று மகன்களும் வருகிறார்கள். பவுனுத்தாயிடம் இருந்து சொத்துக்களை மகன்கள் பெற்றார்களா. பவுனுத்தாய்க்கு என்ன ஆனது என்பதே மீதிக் கதை
பணத்தை மனிதர்களை எவ்வளவு சுயநல சிந்தனையுள்ளவர்களாக மாற்றுகிறது , பணத்திற்கான தேடலில் மனிதர்கள் உன்னதாம உறவுகளை பாதுகாத்துக் கொள்ள தவறுவதையே தாய்கிழவி திரைப்படம் சொல்ல வருகிறது. மெசேஜ் பழசுதான் என்றாலும் படத்தை சலிப்பில்லாத நகைச்சுவை அனுபவமாக ட்ரீட் செய்திருப்பதே படத்தின் பெரிய பலம். குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்தும் அனுப்பும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக மகன்களாக வரும் அருள்தாஸ் , பால சரவணன் , சிங்கம் புலி ஆகிய மூவரின் கதாபாத்திர அமைப்பும் அவர்களின் நகைச்சுவைகளும் தான் படத்தின் பெரிய பலம். இன்னொரு பக்கம் தாய்கிழவியாக நடித்துள்ள ராதிகா சரத்குமார் நடிப்பில் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். படத்தில் பல இடங்களில் கமல் பட பாடல்கள் வருவது கமல் ரசிகர்களுக்கு இப்படம் கூடுதல் கொண்டாட்டமான அனுபவமாக இருக்கும் . நிவாஸ் கே பிரசன்னாவின் இசை சிறப்பு. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் கிராமிய கதைகளை மிக இயல்பாக கையாள்வதில் கெட்டிக்காரர் என்பதை காட்டியிருக்கிறார்.























