ரஜினி கமல் இருவரிடமிருந்து பாராட்டு...சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல்
Parasakthi Thanks Giving Meet : பராசக்தி படத்திற்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படம் வசூல் ரீதியாக தங்களுக்கு லாபகரமாக அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பராசக்தி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தைப் பார்த்து ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் தனக்கு பாராட்டு தெரிவித்ததாக பகிர்ந்துகொண்டார்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி இந்த பொங்கலில் சோலோ ரிலீஸாக வெளியானது. டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார். 1960 களில் தமிழ் நாட்டில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருந்ததால் ரசிகர்களிடம் படத்திற்கு பெரியளவில் எதிபார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்
இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டாலும் இப்படம் முழுக்க முழுக்க கற்பனையான கதாபாத்திரங்களை வைத்தே உருவாகியுள்ளது. இதனால் அரசியல் படம் என்பதைக் காட்டிலும் பொழுதுபோக்கு படம் என்று இப்படத்தை சொல்லலாம். தொய்வான திரைக்கதை , போர் அடிக்கும் காதல் காட்சிகள் என படம் வெகுஜன ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது
பராசக்தி வசூல்
3 நாட்களில் பராசக்தி திரைப்படம் உலகளவில் 50 கோடி வரை வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பொங்கலுக்கு விஜயின் பராசக்தி திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பராசக்தி படம் மட்டுமே பொங்கலுக்கு ஒரே ஆப்ஷனாக மாறியது. ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியானதும் மக்கள் பராசக்தி படத்திற்கு பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. மற்ற பொங்கலைக் காட்டிலும் இந்த பொங்கலுக்கு திரையரங்குகள் களையிழந்தே காணப்படுகின்றன.
ரஜினி கமலிடம் பாராட்டு
பராசக்தி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் " பராசக்தி படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் பார்த்து எனக்கு அழைத்து பேசினார். படக்குழுவினர் அனைவருக்கும் சொல்லிவிடுங்கள் படம் பயங்கரமா இருந்தது என்று சொன்னார். கமல் சாரிடம் இந்த பாராட்டை வாங்குவது அவ்வளவு எளிய விஷயம் இல்லை. அமரன் படத்தைப் பார்த்தே 2 நிமிடம் தான் பேசினார். ஆனால் இந்த படத்தைப் பார்த்து அவர் நீண்ட நேரம் பேசினார். அதன் பிறகு இன்று காலை என் தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்து பேசினார். சிவகார்த்திகேயன் இது ரொம்ப துணிச்சலான படம். இரண்டாம் பாதி சிறப்பாக இருந்தது என்றார். " என்று பகிர்ந்துகொண்டார்.





















