மீண்டும் தொடரும் அரசன் படப்பிடிப்பு..தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் வாங்கிய முன்பணத்தை திருப்பி தர சிம்பு முடிவு
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வாங்கிய முன்பணம் 4 கோடியை சிம்பு திருப்பி தர சம்மதித்துள்ள நிலையில் ஒரு சில நாட்களில் அரசன் படப்பிடிப்பு தொடர இருக்கிறது

தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் வாங்கிய முன்பணத்தை தராததால் சிம்பு நடித்து வந்த அரசன் படத்தில் பணியாற்ற தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்து வந்தனர். இப்படியான நிலையில் ஐசரி கணேஷிடம் பெற்ற பணத்தை திருப்பி தர சிம்பு சம்மதித்துள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அரசன் படப்பிடிப்பு தொடர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் பெரியளவிலான ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிலம்பரசன். ஆனால் இவர் மீது கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வராதது , உடல் எடை அதிகரித்தது என சிம்பு எல்லா பக்கமும் விமர்சனங்களால் சூழப்பட்டார். இப்படியான நிலையில் தான் தனது உடல் எடையை குறைத்து வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்தார். அடுத்தடுத்து பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் கமிட் ஆனாலும் சிம்பு நடித்து குறைவான படங்களே வெளியாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு வெளியான தக் லைஃப் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. தற்போது கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார் . வடசென்னையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்ப்பு வைத்துள்ளார்கள்.
சிம்பு ஐசரி கணேஷ் மோதல்
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதனைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதற்காக ரூ5 கோடி அவருக்கு முன்பணமாக வழங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்த படம் உருவாகவில்லை. சிம்புவிற்கு கொடுத்த ரூ 5 கோடி முன்பணத்தோடு படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷனுக்காக தயாரிப்பாளர் மேலும் ரூ 2 கோடி செலவு செய்திருந்தார். மொத்தமாக சிம்புவிடம் ரூ 7 கோடி ஐசரி கணேஷ் திருப்பி கேட்டார். இந்த தொகையை தர சிம்பு மறுத்ததால் தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நாடினார். சிம்பு பணத்தை திருப்பி தராதவரை வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த அரசன் படத்திற்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் அறிவித்தது. இதனால் அரசன் படப்பிடிப்பு நின்றது மட்டுமில்லாமல் சிம்பு நடிக்க இருந்த கஸாகிராண்ட் விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நின்றுபோனது
6.5 கோடி திருப்பி தர முடிவு
பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் இருந்து வாங்கிய ரூ4கோடியை திருப்பி தர சிம்பு சம்மதித்துள்ளதாகவும் . அரசன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு ரூ2.5 கோடி தரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த 3 நாட்கள் சிம்பு காஸா கிராண்ட் விளம்பரத்தில் நடிக்க இருப்பதாகவும் இதனைத் தொடர்ந்து அவர் அரசன் படப்பிடிப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















