"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
நகைச்சுவை நடிகர் செந்தில் குறித்து அவரது மகன் மணிகண்டன் பிரபு பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான செந்திலின் மகன் டாக்டர் மணிகண்ட பிரபு, தனது தந்தையின் சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் குடும்பத்துடன் செலவிட முடியாத சூழ்நிலை குறித்து அவர் பேசியிருப்பது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேரம் செலவிட்டதே இல்லை
இதுகுறித்து பேசிய மணிகண்ட பிரபு, "சின்ன வயதில் அப்பாவுடன் அதிக நேரம் செலவிட்டதே இல்லை. அந்த காலத்தில் அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தார். வாரத்திற்கு ஒருமுறை அல்லது சில நேரங்களில் மாதத்திற்கு ஒருமுறைதான் அவரை பார்க்க முடியும். பெரும்பாலும் நாங்கள் தூங்கிய பிறகுதான் வீட்டுக்கு வருவார். நாங்கள் எழுவதற்கு முன்பே மீண்டும் படப்பிடிப்புக்காக கிளம்பி விடுவார். அவர் வந்து எங்களை பார்த்துவிட்டு சென்றதை கூட அம்மா சொல்லித்தான் தெரிந்துகொள்வோம்" என்று கூறியுள்ளார்.
பள்ளி நாட்களில் மற்ற நண்பர்களின் தந்தைகள் பள்ளிக்கு வருவதைப் பார்த்தபோது, "என் அப்பா மட்டும் ஏன் வரவில்லை?" என்ற ஏக்கம் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர், குடும்பத்திற்காகத்தான் அந்த தியாகங்களை செந்தில் செய்தார் என்பதை புரிந்துகொண்ட பிறகு அந்த வருத்தம் மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்பா அடிவாங்கும் காட்சிகள் குறித்து
திரைப்படங்களில் அடிக்கடி அடி வாங்கும் கதாபாத்திரங்களில் செந்தில் நடித்ததை சிறுவயதில் ஏற்றுக்கொள்ள முடியாமல், "ஏன் எப்போதும் நீங்கள்தான் அடி வாங்க வேண்டும்? ஒரு காட்சியாவது நீங்கள் திருப்பி அடிக்க வேண்டாமா?" என்று நேரடியாக தந்தையிடம் கேட்டதாகவும் மணிகண்ட பிரபு நினைவுகூர்ந்தார். அதற்கு, "இயக்குநர் எப்படி சொல்கிறாரோ அப்படித்தான் நடிக்க வேண்டும். அதுதான் ஒரு நடிகரின் கடமை" என்று செந்தில் அமைதியாக பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது காதல் திருமணம் குறித்த தகவலை வீட்டில் கூறியபோது, தந்தை எதிர்ப்பார் என்று நினைத்ததாகவும், ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் அதை ஏற்றுக்கொண்டதாகவும் மணிகண்ட பிரபு கூறினார். அதனால் தந்தை-மகன் இடையே பெரிய சண்டைகள் ஏற்பட்டதே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கவுண்டமணி செந்தில் உறவு குறித்து
மேலும், செந்தில் - கவுண்டமணி நட்பு குறித்து பேசிய அவர், "யாராவது கவுண்டமணி பற்றி தவறாக பேசினால் அப்பாவுக்கு பிடிக்காது. இன்றும் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வார்கள். திரையில் எப்படி இணைந்து இருந்தார்களோ, திரைக்கு வெளியிலும் அண்ணன்-தம்பி போலவே இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
அதேபோல், ஒருகாலத்தில் செந்திலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. அதுதான் தனக்கு பிடிக்காத விஷயம் என்றும், ஆனால் தற்போது அந்த பழக்கத்தை அவர் முழுமையாக கைவிட்டுவிட்டார் என்றும் மணிகண்ட பிரபு தெரிவித்துள்ளார்.
இறுதியாக, "எங்களுடன் நேரம் செலவிட முடியாமல் ஓடியதுதான் அப்பா செய்த மிகப்பெரிய தியாகம். பிறந்தநாள், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. ஆனால் வேலை காரணமாக முடியவில்லை. அதனால்தான் இன்று என் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















