என் படம் எப்போ வரும்னு தெரியல..சூர்யா மீது வழக்குத் தொடரப் போகும் ஆர்ஜே பாலாஜி?
கருப்பு படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் நிலுவையில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சூர்யாவின் கருப்பு திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளால் சூழப்பட்டுள்ளது. பலமுறை படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு மற்றும் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் கமெண்ட்ரியின் போது கருப்பு படம் ரிலீஸ் தேதி முடிவாகாதது குறித்து ஆர் ஜே பாலாஜி தனது அதிருப்தியை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் 45 ஆவது படமாக கருப்பு திரைப்படம் உருவாகியுள்ளது. 2025 தீபாவளி வெளியீடாக இப்படம் வெளியாக இருந்து பின் ரிலீஸ் பல முறை ஒத்திவைக்கப்பட்டது. படத்திற்கு எதிர்பார்த்த ஓடிடி விற்பனை அமையவில்லை, போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடியவில்லை என படக்குழு தரப்பில் இருந்து பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன.
இதனால் சூர்யா ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர், சிலர் சூர்யா மற்றும் குழுவினரின் மோசமான திட்டமிடலைக் குற்றம் சாட்டினர். அண்மையில் படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் , படத்தின் ரீரெக்கர்டிங் நடந்து வருவதாகவும் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இதனிடையில் கருப்பு திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது
கருப்பு திரைப்படம் வெளியாகாதா ?
அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியான தகவலின்படி கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யாததால் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுக்கு ஆர் ஜே பாலாஜிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் படத்தின் இறுதிகட்ட போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நிலுவையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தை வெளியிடாத காரணத்திற்காக தயாரிப்பாளர் மற்றும் சூர்யா மீது ஆர் ஜே பாலாஜி சட்ட ரீதியாக வழக்கு தொடர இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிருப்தியை காட்டிய ஆர்ஜே பாலாஜி
அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வர்ணனை செய்த ஆர் ஜே பாலாஜி வெளிப்படையாக தனது அதிருப்தியை காட்டினார். 'சிஎஸ்கே அணியில் இருந்து ரச்சின் ரவிந்திரா கூட வெளியே வந்துவிட்டார் நான் எடுத்த படம் எப்போது வெளிய வருமோ" என்று ஆர் ஜே பாலாஜி கூறினார்.























