JanaNayagan : பலரின் கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கிறது..தயாரிப்பாளர் ஆதங்கம்
ஜனநாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார்

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை அடையாளம் தெரியாத நபர்கள் இணையத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். படத்தின் தனித்தனி காட்சிகள் இணையத்தில் வெளியாகியதைத் தொடர்ந்து முழுப்படமும் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஜனநாயகன் படக்குழுவிற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரைப்பட துறைக்கே அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. பல்வேறு திரை பிரபலங்கள் இந்த செயலை கண்டித்ததுடன் தீவிர சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள்.
ஜனநாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . தனது எக்ஸ் பதிவில் அவர்
"3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடும் ஜனநாயகன் படத்தை ஆன் லைனில் யாரோ திருடி வெளியிட்டுள்ளார்கள். அப்படத்தின் தயாரிப்பாளர் பார்வையில், இயக்குநரின் பார்வையில், இதில் பங்கேற்றிருப்பதால் துளிர்க்கக் காத்திருக்கும் பலரின் கனவுகளின் பார்வையில் இதைப் பார்க்க விரும்புகிறேன். சமீபத்தில் எனது நிறுவனத்தின் மூலமாக வெளியான சல்லியர்கள் படம் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட வலி, இழப்பு இவற்றை சொல்ல முடியாது. அதன்பிறகு அதை அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியிட்டு சமன் செய்தோம். ஆனால் ஜனநாயகன் மிகப் பெரிய முதலீட்டுப் படம். அது திரையரங்குகளுக்கு குறித்த நேரத்தில் வராதிருந்ததே மிகப்பெரிய இழப்பை தயாரிப்பாளருக்கு ஏற்படுத்தியிருக்கும். அதையும் தாண்டி இப்போது திருட்டுத்தனமாக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்றால் ஒட்டுமொத்த இழப்பையும் தயாரிப்பாளர் தாங்க வேண்டும் என்பது வேதனை. இழப்பு மேல் இழப்பு. இயக்குநரின் உழைப்பு பலரின் கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கிறது. இது திரையுலகில் நடக்கக்கூடாத குற்றச் செயல். யாரோ ஒருவரின் உழைப்பு காசு பணத்தில் திருடுபவர்கள் சப்புக்கொட்டிக் கொள்வதை விடவே கூடாது. யார் இந்த வேலையை செய்தது எனக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திரையுலகிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டிய திருட்டுக் களைகள். உழைப்பைச் சுரண்டிக் கொழுப்பவர்கள் இனி அச் செயலை செய்யக்கூடாது என்ற எண்ணம் வருமளவிற்கு நடவடிக்கைகள் இருக்க வேண்டும். திரையுலகினர் ஒற்றுமையுடன் இணைந்து இந்த இழிசெயலை செய்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்." என குறியுள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















