தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்ற பார்க்கிறார்கள்..திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பா ரஞ்சித் கருத்து
வன்முறையைத் துண்டும் விதமாக பேசுபவர்களையும் செயல்படும் சங் பரிவார் அமைப்பினரை தமிழ்நாடு அரசு கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இயக்குநர் பா ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார்

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதில் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த சர்ச்சைக் குறித்து திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் சர்ச்சைப் பற்றி பா ரஞ்சித்
திருகார்த்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் விளக்கேற்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சட்ட ஒழுங்கு பாதுக்காப்பு காரணங்களுக்காக தீபமேற்ற தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்த விவாகரத்தை கையண்ட விதம் குறித்து தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த சர்ச்சைக் குறித்து திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
தமிழ்நாட்டை அயோத்தியாக்க பார்க்கிறார்கள்
சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது. அதன்படியே மக்களிடையே சுமூகமான நல்லிணக்கம் பேணப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கில் புதிய குழப்பங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ய்ப்பாக பாரதிய ஜனதாவும் அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக இதைக் கையிலெடுத்திருக்கிறார்கள். தர்காவை அப்புறப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அயோத்தியாக மாற வேண்டுமென பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்களும் இந்துத்துவவாதிகளும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். மேலும், சமூக நல்லிணக்கம் சிதையும் அபாயம் உள்ள இத்தகைய வழக்குகளில் இந்தப் பின்னணியை மனதில் வைத்தே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். பன்முகத்தன்மையைச் சிதைத்து, சிறுபான்மை சமூகங்கள் மீது குறி வைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சங் பரிவார அமைப்புகளைக் கடுமையாக எச்சரிப்பதோடு, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள், செயல்படுகிறவர்களைக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசைக் கோருகிறது." என அவர் பதிவிட்டுள்ளார்





















