இனிமேல் சூர்யா பக்கம் போகமாட்டேன்..ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த மோகன் ஜி
சூர்யாவைப் பற்றி இனிமேல் தான் எந்த வித கருத்தும் சமூக வலைதளத்தில் தெரிவிக்க மாட்டேன் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்

ஜெய் பீம் படம் வெளியானது முதல் நடிகர் சூர்யா மீது அவ்வப்போது தனது விமர்சனங்களை தெரிவித்து வந்த மோகன் ஜி தற்போது இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். இனிமேல் சமூக வலைதளங்களில் சூர்யா பற்றி பேசவோ அல்லது சூர்யா ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவோ மாட்டேன் என ரங்கராஜ் பாண்டே பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சூர்யா தயாரிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் காட்சி ஒன்றில் குறிப்பிட்ட சாதியினரை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் சர்ச்சை எழுந்தது. அதே சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர் மோகன் ஜி அப்போது முதல் நடிகர் சூர்யா மீது தனது விமர்சனங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சூர்யா காப்பீடு ஏற்பாடு செய்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என மோகன் ஜி பதிவிட்டார். இதனால் கடுப்பான சூர்யா ரசிகர்கள் அவரை பயங்கரமாக விமர்சித்தனர். இதுகுறித்து ரங்கராஜ் பாண்டேவுக்கு அளித்த நேர்காணலில் மோகன் ஜி பேசியுள்ளார்.
சூர்யாவுடன் எந்த பிரச்சனைக்கும் செல்லமாட்டேன்
சூர்யாவுடனான சர்ச்சை குறித்து பேசுகையில் ' கடந்த ஆண்டு பா ரஞ்சித் இயக்கிவந்த வேட்டுவம் படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதற்காக பா ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனுபவம் வாய்ந்த கலைஞர்களை வைத்து போதுமான ஏற்பாடுகளோடுதான் இந்த சண்டை காட்சிகளை எடுக்கிறார்கள். அதையும் மீறி நடந்த அந்த நிகழ்வு ஒரு விபத்து என்று ரஞ்சித்திற்கு ஆதரவாக நான் ஒரு பதிவிட்டேன். அதனை விமர்சித்து சில கமெண்ட் செய்தார்கள் என்று அந்த பதிவை நீக்கிவிட்டேன். இதன் பின் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது படங்களில் பணியாற்றும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு காப்பீடு வசதி ஏற்பாடு செய்து கொடுத்திருக்கும் தகவலை பகிர்ந்தேன். அந்த பதிவில் சூர்யாவும் இதே போல் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளதாக நிறைய பேர் பதிவிட்டார்கள்.
நான் யூனியனில் விசாரித்தபோது நடிகர்கள் காப்பீடு ஏற்பாடு செய்துதர தயாராக இருந்தாலும் அதற்காக வசதிகள் இங்கில்லை என்றும் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களுக்கு அப்படி எந்த காப்பீடு வசதியும் செய்து தரவில்லை என்று சொன்னார்கள். இதை தான் நான் அவர்களிடம் சொன்னேன். உடனே ஜெய் பீம் படத்தில் காலண்டரை பதிவிட்டு என்னை விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். இனிவரும் காலங்களில் சூர்யா பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். " என்று மோகன் ஜி தெரிவித்தார்.























