Udhayanidhi Stalin on Pa.Ranjith: “எங்கு நடந்தாலும் தப்பு தப்புதான்! தலைவர்கள் வழியில்தான் எங்கள் பயணம்” - உதயநிதி அதிரடி பதில்
மாமன்னன் படத்தை குறிப்பிட்டு இயக்குனர் பா.ரஞ்சித் முன்வைத்த விமர்சனம் குறித்த கேள்விக்கு, எங்கு நடந்தாலும் தப்பு தப்பு தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

மாநகாராட்சி பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ -மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெருநகராட்சி சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திந்தார்.
அப்போது, இயக்குனர் பா.ரஞ்சித் மாமன்னன் படத்தை குறிப்பிட்டு திமுகவில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுப்பாட்டை களைவதற்கான வேலைகளை உதயநிதி ஸ்டாலின் ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம் என ட்வீட் செய்திருந்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், நீங்கள் சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த உதயநிதி: “யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்கு நடந்தாலும் தப்பு தப்புதான் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். எங்கள் தலைவர்கள் அண்ணா, பெரியார், கலைஞர் எங்களை அப்படித்தான் வழி நடத்தி இருக்கிறார்கள் தலைவரும் அப்படித்தான் வழி நடத்துகிறார்”. என பதில் அளித்தார்.
முன்னதாக நேற்று இயக்குனர் பா.ரஞ்சித் மாமன்னன் திரைப்படம் குறித்து ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டதாவது: “மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLA-க்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு உதயநிதிஸ்டாலின் திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.…
— pa.ranjith (@beemji) July 3, 2023
நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இதற்கு பதில் ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது: “மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.
ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார்.
`பராசக்தி'யில் தொடங்கி `மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.
ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட.
ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர்
வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.
இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி”.இவ்வாறு அவர் பதிவு செய்திருந்தார்.
`மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
— Udhay (@Udhaystalin) July 3, 2023
அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே… https://t.co/i3FAanRGca
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















