Vairamuthu: முதலமைச்சர் என்ற தோரணை இல்லை.. மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து!
கலைஞர் வெற்றிடத்தைநிரப்ப வந்தேன் என்று சொல்லாமல் சொல்வதுபோல் பொன்னாடை பூட்டினார் என முதலமைச்சர் ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து புகழ்ந்துள்ளார்.

இலக்கியத்துக்கான ஞானபீடம் விருது வென்ற தன்னை நேரில் வந்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து புகழ்ந்து பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இலக்கிய உலகின் மிக உயரிய விருதான ஞானபீடம் விருது 2025ம் ஆண்டுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
முதலமைச்சர் வாழ்த்து
முதலமைச்சர் ஸ்டாலின் தன் வாழ்த்து பதிவில், “தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது! காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது! தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.
தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை வாழ்த்துகிறேன்! கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது!” என தெரிவித்திருந்தார். தொடர்ந்து நேரில் சென்றும் முதலமைச்சர் வைரமுத்துவை வாழ்த்தினார்.
முன்னதாக ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டதும் வைரமுத்து கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் இந்த விருது தமிழ் கவிதைக்கு இதுவரை கிடைக்கவில்லை என்ற குறையை என்மூலம் போக்கியுள்ளது. மண்ணுக்கும், மக்களுக்கும் ஞானபீட விருதை காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்திருந்தார்.
ஞானபீட விருதின்
— வைரமுத்து (@Vairamuthu) March 16, 2026
மதிப்பறிந்த
மாண்புமிகு முதலமைச்சர்
இல்லம் தேடிவந்து
உள்ளம் மகிழவைத்தார்
என்னவொரு எளிமை!
முதலமைச்சர் என்ற
தோரணை இல்லை
ஆளும் தலைவன் என்ற
ஆரவாரம் ஏதுமில்லை
ஒரு சகோதரராய்
சமகால நண்பராய்
இயல்பாய் இனிமையாய்
வருகை தந்தார்
கலைஞர் வெற்றிடத்தை
நிரப்ப வந்தேன் என்று… pic.twitter.com/asSRcxPcQ2
புகழாரம் சூட்டிய வைரமுத்து
இந்த நிலையில் தன்னை வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலினை வைரமுத்து புகழ்ந்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில், “ஞானபீட விருதின் மதிப்பறிந்த மாண்புமிகு முதலமைச்சர் இல்லம் தேடிவந்து உள்ளம் மகிழவைத்தார். என்னவொரு எளிமை!. முதலமைச்சர் என்ற தோரணை இல்லைஆளும் தலைவன் என்ற ஆரவாரம் ஏதுமில்லை. ஒரு சகோதரராய்
சமகால நண்பராய், இயல்பாய் இனிமையாய், வருகை தந்தார்
கலைஞர் வெற்றிடத்தைநிரப்ப வந்தேன் என்று சொல்லாமல் சொல்வதுபோல் பொன்னாடை பூட்டினார்; புத்துணர்ச்சி கூட்டினார். தேன் சிறிது கலந்ததேநீர் அருந்தினார். ஞானபீடத்தின் வரலாறு கேட்டார். ஞானத்தின் உயரமும் பீடத்தின் ஆழமும்
அறிந்துகொண்டார். வாசல்வரை சென்று வழியனுப்பினேன். அவர் விடைகொண்டதும், யானை கடந்துபோன வீதிபோல் வெறிச்சோடிப் போயிற்று எனது கூடம்” என தெரிவித்துள்ளார்.























