CM Joseph Vijay: சமூகநீதி மீதான நம்பிக்கை.. விஜய் அமைச்சரவையை பாராட்டிய பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்!
தமிழக அமைச்சரவையில் விசிக, காங்கிரஸில் இருந்து ஒருவரும், தமிழக வெற்றிக் கழகத்தில் 6 பேரும் என 8 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளது வரலாற்று சிறப்பு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனை மாரி செல்வராஜ்,பா.ரஞ்சித் பாராட்டியுள்ளனர்.

சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தமிழக அமைச்சரவை அமைந்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் பாராட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் விஜயுடன் சேர்த்து மொத்தம் 35 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 31 பேர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் காங்கிரஸில் இருந்தும், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் ஒருவரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக விசிக, காங்கிரஸில் இருந்து ஒருவரும், தமிழக வெற்றிக் கழகத்தில் 6 பேரும் என 8 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளது வரலாற்று சிறப்பு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு பலரும் முதலமைச்சர் விஜயை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் ஆகியோரும் விஜயை பாராட்டியுள்ளனர்.
மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கு எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பெரும் எதிர்பார்ப்போடு இந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் இளம்தலைமுறை அமைச்சர்களுக்கும் பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும் , பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள் பணிகள் சிறக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
இதேபோல் இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது. நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















